கொழும்பு: கொழும்பு குணசிங்கபுர மஞ்சள் கோட்டில் கர்ப்பிணி பெண் முஜிபாவை வாகனத்தால் மோதி கொலை செய்த நபர் நேற்று (09) புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
விபத்து இடம்பெற்ற தினமே சிங்கப்பூருக்கு தப்பிச்சென்று தலை மறைவான விலான் பியரத் அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம்(8) மீண்டும் நாடு திரும்பியுள்ளார். பொலிஸில் சரணடைந்த இவர் நேற்று புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
வாகனத்தில் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழந்ததையடுத்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவான சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவி (இன்டர்போல்) பெறப்பட்டிருந்த நிலையிலேயே இவர் நாடு திரும்பி சரணடைந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
இதனால் இன்டர்போலிற்கூடாக விடுக்கப்பட்டிருந்த சிவப்பு அறிவிப்பினை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படு வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பிரபல தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளரெனவும் அவர் தெரிவித்தார்.
குணசிங்கபுர மஞ்சள் கோட்டில் ஏப்ரல் 27ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றது. பூஜாபிட்டியைச் சேர்ந்த மொஹமட் முஜிபா (27) என்ற பெண் தனது கணவர், ஆறு மாதக் கைக்குழந்தை மற்றும் சகோதரனுடன் குணசிங்கபுர மஞ்சள் கோட்டில் சென்றபோது, வெள்ளைநிற மிட்சுபிஷி ஜீப்ரக வாகனம் முஜிபா மீது மோதி விபத்துக்குள்ளானது.
கணவரினதும் தனது சகோதரனினதும் பாதுகாப்பில் இருவருக்கும் நடுவே பயணித்துக் கொண்டிருந்த பெண் மீது மோதியது மட்டுமல்லாமல், தூக்கியெறியப்பட்ட பெண்மீது மீண்டும் வாகனத்தை ஏற்றி கொலைசெய்ததன் பின்னர்இ சிங்கப்பூருக்கு தப்பியோடி தலைமறைவாகியிருப்பதாக கூறியே மேற்படி சந்தேகநபர் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
– தினகரன்
Published by

Leave a comment