மட்டக்களப்பு: அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டை வைத்துள்ள ஊடகவியலாளர்களை மாத்திரம் மாவட்ட செயலகத்தினுல் செய்தி சேகரிக்க அனுமதிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் காவற்கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எழுத்து மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரினால் 06-05-2014 திகதி கையொப்பமிட்டு அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை மாத்திரம் அனுமதித்தல் எனும் தலைப்பில் எழுத்து மூலம் ஒரு கடிதமொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் காவற்கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மாவட்ட செயலகத்தில் பல்வேறு கூட்டங்கள்,நிகழ்வுகள் நடைபெறுகின்ற வேளையில் அது தொடர்பான செய்திகள் அல்லது தகவல்கள் சில அதிகாரமளிக்கப்படாதவர்களினால் திரித்து அல்லது உண்மைக்கு புறப்பான உறுதிப்படுத்தப்படாத செய்திகளாக வெளிவருவதால் இது பொது மக்கள் மத்தியில் சில தப்பபிப்ராயங்களை ஏற்படுத்தும் ஒரு செயலாக அமைந்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
ஆகவே இதை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக ஊடகவியலாளர்கள் என்ற தோரணையில் வருபவர்களின் அடையாள அட்டையினை பரிசீலனை செய்து , அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை உள்ளவர்களை மாத்திரம் மாவட்ட செயலகத்தினுல் அனுமதிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறு அடையாள அட்டை இல்லாதவர்களை எக்காரணம் கொண்டும் செய்தி சேகரிக்க அனுமதிக்கக்கூடாது என்பதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிகர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரதி தகவலுக்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Published by



Leave a comment