இலங்கையில்
சிறுபான்மை இனத்துக்கு
என்று பற்பல அமைப்புக்கள்….
முஸ்லீம்களுக்கும் பலநூறு அமைப்புக்கள்.
அதுமாத்திரமா…?
அவுஸ்திரேலியாவிலும்,
ஐரோப்பாவிலும்
மத்திய கிழக்கிலும்
இருக்கின்றன…அமைப்புக்கள்
இயங்குகின்றன.
வருடத்தில் வரும்
பெருநாளைக்கும்
மாதத்தில் வரும் விடுமுறைக்கும்
இலங்கை முஸ்லிம்கள்
என்று ஒன்று சேர்ந்து,
சமூசா கடித்து, தேத்தன்னிகுடிக்க
பல அமைப்புக்கள் உலகமெங்கும்.
பாராளுமன்ற ஆசனத்தைக்
கச்சிதமாகப் பிடித்துக்கொள்ள
பல மந்திரிகளும்
எமது முஸ்லிம்களிடத்தில்
இருக்கின்றனர்.
வருடத்தில் ஒருமுறை
வரும் ரமழான் பெருநாளுக்கு
வாழ்த்துக்கூற மறக்கமாட்டார்கள்..
அறிக்கைவிடவும் தயங்கமாட்டார்கள்.
ஆறுவடங்களுக்கு ஒருமுறை
ஆற்றைக்கடந்தும் நீந்திச்செல்ல
தயங்காத எம் இனத்தின்
அரசியல் சாக்கடைகள்
மக்கள் அரங்கில் முனுமுனுக்கவும்
கோசமிடவும் அஞ்சாதவர்கள்
எம் சமயம் சார்ந்த
தலைமை அமைப்புக்களும்
அரசியல் லாபத்துக்கு
குர்ஆனையும் ஹதீஸையும்
தாரைவார்க்கின்றன.
ஆளும் அரசாங்கமோ
எங்களை அடித்துவிட்டு
காக்கா-தம்பியை சாடிக்கொள்கிறது.
பூச்சாண்டித்தனத்தை
திணித்துக்கொள்கிறது.
பள்ளி உடைந்தால் என்ன?
பர்தா களைந்தால் என்ன?
பல்லுப் போனாலும் பறவாயில்லை
பதவிக்கு தாரைவார்க்க
நாய்வால்போன்று
ஆட்டிக்கொள்கின்றார்கள்
தங்கள் தலைகளை இவர்கள்.
சமூகத்தின் விடிவு
இவர்களிடமில்லை!
பொதுமகனே
நீ எழுந்துநில்
உன்விடியல் நாளை
உன் சமூகத்தை
இம்மண்ணில் தலை
நிமிரச் செய்யும்-நீ
நம்பாதே இன்னும்
இவர்களிடத்தில் ஏமாந்திடாதே.
** அல்லாஹூ அக்பர் **


Leave a comment