புத்தளம்: புத்தளம் நகரில் 1972 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ம் திகதி முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட ஐ.எப்.எம். முன்பள்ளியின் 42 ஆவது வருட நிறைவும் அதன் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியும் சனிக்கிழமை (03) மாலை புத்தளம் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் பூங்காவில் நடைபெற்ற போது 330 புள்ளிகளை பெற்று ‘மா’ இல்லம் சாம்பியனாக தெரிவாகியுள்ளது.
‘மா’, ‘பலா’ ஆகிய இரு இல்லங்களை சேர்ந்த 27 முன் பள்ளி மழலைகள் போட்டிகளில் பங்குபற்றினர். முன் பள்ளி பணிப்பாளர் எம்.எஸ்.பவ்சுல் ரூசி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஐ.எப்.எம்.மத்ரஸாவின் பழைய மாணவரும், புத்தளம் நகர முதல்வருமான கே.ஏ. பாயிஸ் கலந்து கொண்டார். வட மேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன, புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக், புத்தளம் வலய கல்விப்பணிமனையின் தமிழ் பிரிவுக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் இசட்.ஏ.சன்ஹீர், முன்னாள் பணிப்பாளர் ஜவாத் மரிக்கார், புத்தளம் பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்,எம். முசம்மில் உள்ளிட்ட சமய பெரியார்கள், ஐ.எப்.எம். முன் பள்ளியில் பயின்று இன்று சமூகத்தில் உயர் பதவிகளை வகிக்கும் பழைய மாணவர்கள், கல்வி அதிகாரிகள் , அனுசரனையாளர்கள், புத்தளம் நகர முன் பள்ளிகளின் ஆசிரியைகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சகல மாணவர்களுக்கும் அதிதிகளினால் கிண்ணங்கள் வழங்கப்பட்டு, பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, சான்றிதழ்களோடு பரிசு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. இது தவிர போட்டிகளில் தமது திறமைகளை வெளிக்காட்டிய மழலைகளுக்கு விசேட பரிசுகளும் வழங்கப்பட்டன.
நடுவர்களாக கால்ப்பந்தாட்ட துறையின் பீபா நடுவரும், முன்னாள் தேசிய கால்ப்பந்தாட்ட அணி வீரருமான வைத்தியர் ஏ.எச்.எம்.நாளிர், உடற்கல்வி போதனாசிரியர்கலான எம்.எப்.எம்.ஹுமாயூன், எச்.என்.எம்.சிபாக், திருமதி பரீனா, மற்றும் எம்.என்.எம். நவீத் ஆகியோர் கடமையாற்றினர்.
இல்ல அலங்கரிப்பில் முதலாம் இடத்தை பலா இல்லமும் இரண்டாம் இடத்தினை மா இல்லமும் பெற்றுக்கொண்டன. நிகழ்வுகளை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எப். பாத்திமா சரீக்கா தொகுத்து வழங்கினார்.
Published by




Leave a comment