தேர்தல்க ளென்று வந்தால்
திறமை யில் லாதவனை
ஆர்வமாய் வாக்க ளித்து
ஆட்சியில் அமர்த்தி விட்டு
நேர்மையாய் நடக்கச் சொல்லி
நிபந்தனை நிறையப் போட்டு
போர்க்கொடி தூக்கி நிற்கும்
புதுமையை என்னென்று சொல்ல..
பொதுபல சேனா வருவான்
புதுப்புது தொல்லை தருவான்
அதுயிது கெசினோ என்று
அரசாங்கம் சட்டம் போடும்
மெதுவாக சிலபேர் வெளியே
மௌனமாய் எழுந்து செல்ல
பிதுங்கிய விழிகள் வீங்க.
பேசாமல் சிலர் வாக்களிப்பர்.
பள்ளிகள் உடைத்தால் என்ன
பர்தாக்கள் களைந்தால் என்ன
அல்லாஹ் குர்ஆன் தன்னை
அசிங்கியம் செய்தால் என்ன..?
நல்லாவே நடிப்பார். நாங்கள்
நமபியே வாக்களித் தோர்
சொல்லவா வேண்டும் அவர்கள்
சொத்தெல்லாம் பதவிதானே..?
வருகின்ற தேர்த லுக்கும்
வருவார்கள் தலைவ ரெல்லாம்
தருகின்ற வாக்கும் பணமும்
தவறாது நம்மைச் சேரும்
ஒருபோதும் கவலை வேணாம்
ஓணானாய் தலையை ஆட்டி
ஒருவாக்கு போட்டுத் தொலைப்பீர்
ஒருவரைத்தான் வாழ வைப்பீர்.


Leave a comment