மன்னார், மறிச்சுக்கட்டி மக்களுக்கு இதுவரை எதுவித தீர்வும்கிடைக்கவில்லை! வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின்
– PMGG ஊடகப் பிரிவு
மன்னார்: மன்னார், மறிச்சுக்கட்டி மக்களுக்கு இதுவரை எதுவித தீர்வும்கிடைக்கவில்லையென வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ. அஸ்மின் தெரிவிகின்றார்.
மன்னார் மாவட்ட முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மறிச்சிக்கட்டி மரைக்கார் தீவு மக்கள் வில்பத்து சரணயாலயத்துக்குட்பட்ட பிரதேசத்தில் குடியேறியிருக்கிறார்கள் என்ற பிரச்சினை தொடர்பாக வன பரிபாலனத்தினால் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்த விடயம்.
இந்நிலையில் இந்த மக்களுக்கு 50 ஏக்கர் காணி மன்னார் மாவட்ட செயலாளரினூடாக வழங்கப்படவிருப்பாதாக இன்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இதற்காக அந்த மக்கள் சார்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ ரிப்கான் பதியுத்தீன் அவர்கள் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவப்பதாகவும் அந்த ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில் கௌரவ ரிப்கான் பதியுத்தீன் அவர்களிடம் வினவிய போது இவ்வாறான தகவல் ஒன்று தனக்கு கிடைத்திருப்பதாகவும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் கிடைக்கவில்லை என்றும் இதனை உறுதிபடுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ. அஸ்மின்
1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்டு அனைத்து விதமான இழப்புக்களையும் சந்தித்த இம்மக்கள் 2009 ஆண்டுக்குப் பின்னர் இப்போது தங்கள் பூர்வீக இடங்களில் மீளக்குடியேறக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இம்மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை உணர்ந்து அவர்களுக்கான தீர்வுகளை முன்வைப்பது மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் எமது பொறுப்பும் கடமையுமாகும். இருப்பினும் அவர்களது பிரச்சினைகளை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முற்படுவதும் பொருளாதார மற்றும் ஏனைய நலன்களை பெற்றுக் கொள்ள முனைவதும் ஆரோக்கியமான செயற்பாடாக அமையாது.
எனவே மன்னார் மாவட்ட முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மறிச்சிக்கட்டி மரைக்கார் தீவு மக்களுக்கு நீதியான தீர்வொன்று பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொள்கின்றார்.
Leave a comment