கொழும்பு: மொரட்டுவ, ராவத்தாவத்தை பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்று 7 இலட்சத்து 77 ஆயிரம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. இதேவேளை, கிருலப்பனை பிரதேசத்திலுள்ள மற்றுமொரு தனியார் வங்கியில் மேற்கொள்ள முற்பட்ட கொள்ளை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு துணிகர கொள்ளைச் சம்பவங்களும் நேற்று நண்பகல் 1 மணிக்கும் 1.50 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். பட்டப்பகலில் ஆயுதங்களுடன் முழுமையாக முகத்தை மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்து வந்த நான்கு சந்தேக நபர்களே இரு பிரதேசங்களிலும் இடம்பெற்ற வெவ்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இரு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மொரட்டுவ, ராவதாவத்தை பகுதியிலுள்ள தனியார் வங்கிக்குள் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் ஆயுதங்களுடன் நுழைந்த இருவர் ஆயுதங்களை காண்பித்து அந்த வங்கியின் காசாளர் கவுண்டரிலிருந்து 7 இலட்சத்து 77 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
முகம் முழுமையாக மறையும் வகையில் தலைக்கவசம் அணிந்திருந்த இருவரே இவ்வாறு கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர். கிருலப்பனை கொள்ளை முறியடிப்பு இதேவேளை, கிருலப்பனை நகரில் உள்ள தனியார் வங்கிக்கு நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் முகத்தை
மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்துள்ளனர்.வங்கியின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தொடர்பிலும் சந்தேகம் எழுந்ததையடுத்து உடனடியாக வங்கிக்குள் நுழைந்த அவர், வங்கியின் பிரதான கதவுகளை மூடியுள்ளார்.
ஆயுதங்களுடன் ஓடிவந்த கொள்ளையர்கள் இருவரும் தமது கைகளில் இருந்த ஆயுதத்தினால் மூடப்பட்ட கண்ணாடி கதவை உடைக்க முயற்சித்துள்ளனர். உடனடியாக செயற்பட்ட வங்கி பாதுகாப்பு அதிகாரி தன்வசம் இருந்த துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இதன்போது கண்ணாடி வெடித்து சிதறியுள்ளது. இதனையடுத்து முகமூடி அணிந்த வந்த இரு கொள்ளையர்களும் தாம் வந்த மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டு விட்டு வேறு ஒருவரது மோட்டார் சைக்கிளை எடுத்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கண்ணாடி துண்டுகள் தெறித்து படுகாயமடைந்த வங்கி பாதுகாப்பு அதிகாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளார்.மேற்படி இரு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கிருலப்பனை மற்றும் மொரட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
– தினகரன்
Published by

Leave a comment