‘கப்பலை அனுபவமில்லாத இளம்பெண் மாலுமி ஓட்டினார்’ விசாரணையில் அதிர்ச்சி!

ship– S-90

சியோல்: கடலில் மூழ்கியபோது தென்கொரிய கப்பலை அதிக அனுபவமில்லாத இளம்பெண் மாலுமி ஓட்டியதாக   விசாரணையில் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த புதனன்று தென்கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து, ஜெஜூ தீவுக்கு 339 பள்ளி மாணவர் உள்பட 475 பேருடன் சுற்றுலா சென்ற கப்பல் எதிர்பாராத விதமாக நடுக்கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான பலரைத் தேடும் பணி வானிலை காரணமாக தொய்வாக நடந்து வருகிறது. இந்நிலையில் கப்பலின் கேப்டன் மற்றும் இரண்டு உதவி கேப்டன்களைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் ஏற்பட்ட போது கப்பலை ஆறு மாதங்களே அனுபவம் உடைய 25 வயது பெண் மாலுமி ஓட்டி வந்ததாக தெரிய வந்துள்ளது. எந்தவித முன் அனுபவமும் இல்லாத அப்பெண் கப்பலை வழக்கத்திற்கு மாறாக மிகவும் வேகமாக ஓட்டியுள்ளார் என்றும் கண்டறியப் பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வக்கீல் கூறுகையில்,

‘பார்க் ஹகில்ம்ஸ்மன் என்ற 25 வயது இளம் பெண் கப்பலை ஓட்டியுள்ளார். அவருக்கு அப்பணியில் வெறும் ஆறு மாதங்கள் மட்டுமே முன் அனுபவம் இருந்துள்ளது. முன்னதாக அவர் கப்பல் எதையும் ஓட்டவில்லை. அப்போது தான் முதல் முறையாக கப்பலை ஓட்டியுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப் பட்டுள்ள மாலுமி சோ ஜூன் கி கூறுகையில்

‘கப்பல் வழக்கத்திற்கு மாறாக வேகமாக இயக்கப்பட்டது’ என்றார்.

பெண் மாலுமி கப்பலை இயக்கியபோது மூத்த மாலுமிகள் பயணிகளுக்கு முன்னதாக தப்பித்து ஓடி விட்டதாகவும், இரண்டு மாலுமிகளும் ஏன் அவரிடம் கப்பலை இயக்க கூறினர் என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

Published by

Leave a comment