நோய் விசாரிக்கச் செல்லும் பொழுது – சில ஆலோசனைகள்

hospitelமுஹம்மது சுக்ரி 

நோய் விசாரிக்கச் செல்வதற்கு இஸ்லாம் அதிக அவதானத்தையும் ஊக்கத்தையும் வழங்குகின்றது. நபி(ஸல்) கூறினார்கள் ஒரு முஸ்லிம் தம் சகோதரரை காலையில் உடல் நலம் விசாரித்தால், அன்று மாலை வரை அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் துஆச் செய்வார்கள். அவரை மாலையில் உடல் நலம் விசாரித்தால், மறுநாள் காலை வரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அறிவிப்பாளர் : அலி(ரலி), ஆதாரம் : திர்மிதி.

நோய் விசாரிக்கச் செல்லும் போது உண்மையாகவே அந்த நோயாளி நலம் பெற வேண்டும் என்ற தூய்மையான உள்ளத்தைக் கொண்டு செல்லுங்கள். நீங்கள் நலம் விசாரிப்பவர் நோயாளிகளாக இருக்கலாம் அல்லது நோயிலிருந்து அண்மையில் குணமடைந்தவராக இருக்கலாம். 5 இலிருந்து 15 நிமிடங்களுக்குள் அங்கிருந்து வெளியேறி விடுங்கள். அதிக நேரம் தாமதிப்பது அவருக்கு அல்லது குடும்பத்தினருக்கு அசெளகரியமாக இருக்கலாம், புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

நோயாளி வேண்டிக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு அதிக நெருங்கியவராக இருக்கும் போதில் நீங்கள் இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வதில் தப்பில்லை. நோயாளிகளிடம் அல்லது அவர்களது குடும்பத்தினரிடம் இதே போன்று நோய்களுக்கு ஆளானவர்களைப் பற்றியோ அல்லது அண்மையில் மரணித்தவர்களைப் பற்றியோ பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நம்மில் பலர் செய்யும் பெருந்தவறு இது.

நோயாளியின் நிலமையை கேட்டு அறிந்து கொண்டு செல்லுங்கள். அவரோடு பேசிக் கொண்டிருப்பது ஏற்றதா, என்ன வகையான சாப்பாட்டு வகைகளை அவருக்கு எடுத்துச் செல்லலாம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நோயாளியோடு அளவளாவும் போது அவருக்கு விருப்பமான விடயங்களைப் பேசுங்கள். அவரது தன்னம்பிக்கையை, ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில் கதைப்பது நோயிலிருந்து விடுபடுவதற்கான ஊக்குவிப்பை வழங்கும்.

நீங்கள் மருத்துவராக மாறி நோயாளியைக் குழப்ப வேண்டாம். சிலர் ஹோமியோபதி மருந்து எடுங்கள், நாட்டு மருந்து எடுத்தால் நோய் பறந்தே போய் விடும், இந்த மருத்துவ நிபுணரை விட அந் நிபுணர் கைராசிக்காரர் என்றெல்லாம் தலைக்கு வருவதையெல்லாம் சொல்லி நோயாளியையும் வீட்டவர்களையும் சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். இன்னும் சிலர் கத்தரிக்காய் ஆகாது இல்லா விட்டால் நன்றாக மரவள்ளி சாப்பிட்டால் புற்ற நோய் குணமாகி விடும் என்றெல்லாம் கேட்டவை, வாசித்தவை எல்லாவற்றையும் எடுத்து விடுவார்கள்.

நோயுற்றவர்களின் வீட்டாருக்கும் அறிவு உண்டு அவர்கள் தேவையானவற்றைச் செய்திருப்பார்கள். உணருங்கள். நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்லும் நீங்கள் அவரது நோய் அறிகுறிகளை உங்களுக்கிருக்கும் சில அறிகுறிகளுடன் ஒப்பிட்டு பார்த்து நீங்கள் நோயாளியாக மாறி விட வேண்டாம்.

நோய் விசாரிக்கும் போது முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்கள் என்ற பாகுபாடு காட்ட வேண்டாம். முஹம்மத் (ஸல்) அவர்கள் அந்நி மதத்தவர்களை நலம் விசாரிக்கச் சென்ற வரலாறுகள் ஏராளம்.

நோயாளியை ஆறுதல் படுத்துவதாக நினைத்துக் கொண்டு வேதனைப் படுத்த வேண்டாம். குறிப்பாக அவர்களது பொறுப்புக்களை ஞாபகமூட்டுவது அவர்களது இயலாமையை அதிகரிக்கும். நோயாளி வீட்டுத்தகவல்களை காவிக்கொண்டு மற்றவர்களிடம் பரப்பித்திரியாதீர்கள். சிலவேளை நோயாளி தன் நோய் பற்றி மற்றவர்கள் அறிவதை விரும்பாமல் இருக்கலாம்.

நோயாளி நலம் பெற இறைவனிடம் பிரார்த்திப்பதோடு விரைவாகக் குணம் பெற வாழ்த்துக்களையும் சொல்லுங்கள். 

Published by

Leave a comment