காத்தான்குடி: தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபை பல்வேறு டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஓர் அங்கமாக காத்தான்குடி நகர சபை ஏற்பாடு செய்த டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று 07-04-2014 திங்கட்கிழமை காத்தான்குடி நகர சபையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஜேபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீன், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், காத்தான்குடி பிரதேச மேற்பார்வை சுகாதார பரிசோதகர் றபீக், காத்தான்குடி பொலிஸ் நிலைய சிவில் நடவடிக்கைகளுக்கான பொறுப்பதிகாரி எஸ்.செல்வராசா, காத்தான்குடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கருநாகரன், காத்தான்குடி நகர சபையின் பிரதம இலிகிதர் நியாஸ் உட்பட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், நகர சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் இந்தவருடம் 2014 ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரை காத்தான்குடி நகர சபை பிரிவில் 22 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்ட்டுள்ளதாகவும் 9 வயது சிறுமி ஒருவர் உயிரழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள வீடுகள் பரிசோதிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு டெங்கு நுளம்பினால் ஏற்படும் விபரீதங்கள்,சுற்றுப் புறச் சூழலை மாசடையாமல் பாதுகாத்தல் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
Published by

Leave a comment