ஏறாவூர்: கிழக்குமாகாண உள்ளுராட்சி, கிராமிய அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சு இபாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் வேண்டுகோளின் பேரில் ‘பிளான் ஸ்ரீலங்கா” நிறுவனத்தின் அனுசரணையுடன் ஏறாவூர், முஹாஜிரீன் கிராமத்தில் முப்பத்தாறு லெட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மாதிரி பாலர் பாடசாலை கட்டிடம் நேற்று மாலை (01-04-2014) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாணசபை பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் அவர்களும் ஏனைய அதிதிகளாக பிளான் ஸ்ரீலங்கா” நிறுவனத்தின் இலங்கைக்காகன பிரதி நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் கௌரவ ஒபென் ஒலிவா, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எல்.எம்.ஹனிபா, முதலமைச்சரின் செயலாளர் ஜனாப் யூ.எல்.அஸீஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிரதி தவிசாளர் தனது உரையின்போது,
ஏறாவூர் பற்று பிரதேசத்திலுள்ள மக்கள் இலகுவாக தங்களது பிரதேச சபையின் சேவைகளை பெற்றுக் கொள்ள முன்னாள் முதலமைச்சரின் அனுசரணையுடன் இப்பிரதேசத்தில் உப பிரதேச சபை காரியாலயமொன்றை பெற்றிருந்தார்கள்.
தற்போது அக்காரியாலயம் மீண்டும் செங்கலடிக்கே சென்றுவிட்டது. இதனால் இங்கு வாழும் ஏழை மக்கள் தங்களது தேவைகளை பெற வேண்டுமானால் நானூறு ரூபாவுக்கும் மேல் முச்சக்கரவண்டிக்கு பணம் கொடுத்து செல்ல வேண்டிய கஷ்டமான நிலை உருவாகியுள்ளது.
இந்நிலைமையினை கருத்தில் கொண்டு முதலமைச்சின் செயலாளரும், முதலமைச்சரும் மீண்டும் இச் சபையின் உப அலுவலகத்தை இங்கு தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் பேசுகையில் ஏறாவூர் பற்று பதுளை வீதியில் அமைந்துள்ள கூமாச்சோலை, இலுப்படிச்சேனை போன்ற பகுதிகளில் விவசாய செய்கையில் காலங்காலமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விவசாயிகளின் நலன் கருதி இம்முறை காலபோக செய்கைக்காக அவர்களின் வயல்களுக்கும் குளத்துநீர் செல்லும் அளவுக்கு நீர்ப்பாசன பொறியியலாளர் உதவிபுரிய வேண்டும் என்றும், இது சம்பந்தமாக அரசாங்க அதிபருடன் நான் நேரடியாக பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Published by

Leave a comment