லாஹூர்: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி சூப்பர்–10 சுற்றுடன் வெளியேற்றப்பட்டது. அதிலும் கடைசி லீக்கில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக வெறும் 82 ஓட்டங்களில் சுருண்டு மோசமாக தோல்வி அடைந்தது.
20 ஓவர் உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை பறிகொடுத்தது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் அணித்தலைவர் முகமது ஹபீஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை நேற்று சந்தித்து பேசிய அவர் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கான அணித்தலைவர் மற்றும் ஒரு நாள் போட்டி துணைத்தலைவர் பதவி ஆகியவற்றில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
எந்த அணித் தலைவரின் கீழும் தொடர்ந்து விளையாட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணிக்கு, அடுத்த 20 ஓவர் போட்டி 6 மாதங்கள் கழித்து வருவதால் 20 ஓவர் அணியின் புதிய அணித்தலைவரை நியமிப்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவசரம் காட்டாது என்று தெரிகிறது.
இதற்கிடையே, ஆசிய கோப்பை மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு மட்டும் பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மொயின் கான், அந்த பொறுப்பில் தொடருவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. LS
Leave a comment