கர்பலா: கிழக்கு முஸ்லிம்களின் தலைநகரமாக வர்ணிக்கப்படும் ஓர் நகராகவும், குட்டி சிங்கப்பூர் என அழைக்கப்படும் நகரமாகவும் அமையும் காத்தான்குடி நகரின் அருகாமையில் அமைந்துள்ள ஏழைக்கிராமமான கர்பலா கிராமத்தில் ஒரே ஒரு பாலர் பாடசாலையாக அல் மனார், கடந்த 33 வருடங்களாக இருந்து வருகிறது.
முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் டொக்டர் அகமட் பரீட் அவர்களின் கனவு கிராமமாக 1980 களின் ஆரம்பத்தில் கர்பலா முஸ்லிம் கிராமம் அமைக்கப்பட்டது.
கர்பலா அல்மனார் பாடசாலை 1981ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. கர்பலா ஓர் முஸ்லிம் ஏழைக் கிராமாகும். காத்தான்குடி மற்றும் பாலமுனை ஆகிய முஸ்லிம் குடியிருப்புகளுக்கிடையில் இக்கிராமம் அமையப்பெற்றுள்ளது.
இக்கிராமம் உதயமானது தொடக்கம் இன்றுவரைக்கும் இன, நில ரீதியான பிரச்சினைகளும் சிக்கல்களும் இம்மக்களுக்கும், இக்கிராமத்துக்கும் இருந்து வருகின்றன.
கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் ரூபா 12 இலட்சம் இப்பாலர் பாடசாலைக்கு நிரந்தரக் கட்டடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் ஆரையம்பதி பிரதேச செயலகத்தினால் இத்தொகை வேறு ஓர் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக அறிய முடிகிறது.
இதுவரைக்கும் நிரந்தரக்கட்டடம் ஒன்று இல்லாமல் அங்கும் இங்கும் தற்காலிகமாக இப்பாலர் பாடசாலை இயங்கி வருகிறது. வாராந்தம் கர்பலாவுக்கு ஜூம்ஆவுக்கு போய்வந்தால் மட்டும் போதுமானது என எமது காத்தான்குடி மக்கள் அதிகமானவர்கள் நினைத்து வருகின்றனர்.
இக்கிராமத்திற்கு அவ்வப்போது ஏற்படும் அச்சுறுத்தல்களின் போதும், இயற்கை அணர்த்தங்களின் போதும் மற்றும் இதுபோன்ற இன்றைய தேவைகளின் போதும் அம்மக்களின் துயரங்களில் முழுவதுமாக நின்று செயற்படுவது விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிரு சகோதரர்களே என்பது பலருக்கும் தெரியாது.
ஆங்கில கலாசாரத்தோடு தங்களது பிள்ளைகளை வளர்க்க ஆசைப்படும் காத்தானகுடி பெற்றோர்கள், ஆயிரக்கணிக்கான ரூபாய்களை செலவு செய்வதற்கு தயாராக இருக்கின்றனர். இவர்களின் அதிமிகு ஆர்வத்தாலும், ஆதரவாலும் காத்தான்குடியில் ஆங்கில கல்லூரிகள் சந்திக்குச் சந்தி முளைத்து வருகின்றன.
தேவை மீதியின் காரணமாக அழகிய பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டு மீண்டும் கட்டப்படுகின்றன. குடியிருக்க முடியாத அளவு வீடுகள் வானை முட்டுகின்றன. இரவில் பிரதான வீதி மினுமினுக்கிறது.
இருந்தும்,ஒருவேளை சோற்றுக்கு சிரமப்படும் இவ் ஏழைச் சிறார்களின் ஆரம்பக்கல்வியைச் சிந்திப்பதற்கு பொதுமக்களும் சம்பந்தப்பட்டவர்களும் தவறி விடுகின்றனர். இக்குழந்தைகளின் வீடுகளில் மாத்திரமல்லாது கண்களிலும், ஆடைகளிலும் ஏழ்மை குடியிருக்கிறது. இதனால் இக்குழந்தைகள் கல்வியைச் சுமக்கும் ஆர்வம் மக்களால் புறக்கணிக்கப்படுகிறது.
ஓரிரு எமது சகோதர்களின் நன்கொடைகள் மூலமாக, இப்பாலர் பாடசாலையை இயக்கிச் செல்வதற்குரிய அடிப்படை பாடசாலைப் பொருட்கள் கிடைக்கப்பெற்று, தற்பொழுது தற்காலிகமாக ஓர் வீட்டில் இப்பாலர் பாடசாலை இயங்கி வருகிறது.
– இப்பாலர் பாடசாலைக்கு நிரந்தரக் கட்டடம் இல்லை.
– மாணவர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் அறவிடப்படுவதில்லை.
– இப்பாடசாலையின் ஆசிரியைக்கான மாதாந்தச் சம்பளம், எமது சகோதரர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, சேகரித்து வழங்கப்படுகிறது.
– தங்களது பிள்ளைகளை காத்தான்குடிக்கு அனுப்பிவைத்து படிப்பிப்பதற்கு வறுமை தடையாக உள்ளது.
– இப்பாலர் பாடசாலையில் 25 குழந்தைகள் கல்வி கற்கின்றனர். உரிய சீருடை இல்லாமல் கிழிந்த ஆடையுடன் இக்குழந்தைகள் பாடசாலைக்கு வந்து செல்கின்றனர்.
– கல்வி போதிப்பதற்குரிய நூற்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் அவசியமாகத் தேவைப்படுகின்றன.
எனவே, உள்ளுரிலும் வெளியூர்களிலும் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் எமது சகோதரர்கள் தங்களால் முடியாமான உதவிகளை இம்மையிலும் மறுமையிலும் பயனளிக்கக்கூடிய கல்விக்கு உதவி செய்து, இக்குழந்தைகளுக்கு தங்களது பிரதேசத்திலேயே கல்வியைக் கற்க உதவுமாரும் தாழ்மையுடன் கேட்கின்றோம்.
இப்பாலகர்களின் கல்விக்கு உதவி செய்ய விரும்பும் சகோதரர்கள் ரி.எல். அகமட் முனீர் ஆசிரியரை தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
கைத்தொலைபேசி இல: 0776176178

Leave a comment