பாலமுனை: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி-பாலமுனை நடுவோடை பிரதேச கடற்கரையோரத்தில் இறந்த நிலையில் இனம் தெரியாத பச்சிளம் குழந்தையொன்று நேற்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை 4 மணியளவில் கடற்கரையிலிருந்து ஒரு மீனவரினால் மீட்கப்பட்ட இப் பச்சிளம் குழந்தை பிறந்து சுமார் 3 மூன்று தினங்களுக்குள் வீசப்பட்டிருக்கலாம் என அப் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து சடலத்தினை பார்வையிட்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியும் ,ஏறாவூர்,களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான ஏ.எம்.எம்.றியால் சடலத்தினை; பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், இச்சடலம் கரையொதுங்கியதைக் கண்டவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Published by




Leave a comment