கோலாலம்பூர்: விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் நான்கு பேர் போலி கடவுச்சீட்டில் பயணம் செய்ததைப் பொலீசார் கண்டறிந்துள்ளனர். எனவே, மாயமான விமானம் கடத்தப் பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் நேற்று அதிகாலை புறப்பட்டது. காலை 6.30 மணியளவில் பீஜிங் சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த விமானம் புறப்பட்டு சென்ற சுமார் 2 மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது.
இதனால் பதற்றமடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த விமானம் தொடர்பு எல்லைக்குள் இருந்து மாயமாகி விட்டதாக அறிவித்தனர்.
இதற்கிடையில், வியட்நாமின் தோ சூ தீவில் இருந்து 153 மைல் தொலைவில் உள்ள தென் சீனக் கடலுக்குள் அந்த விமானம் விழுந்து விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. இந்தப் பயங்கர விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பயணிகளும் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்களில் 5 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் விபத்துக் குறித்துப் பொலீசார் மேற்கொண்ட விசாரணையில் விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் நான்கு பேர் போலி கடவுச்சீட்டில் மூலம் பயணம் செய்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, விமானம் கடத்தப் பட்டு விபத்தில் சிக்க வைக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. 239 பேரை பலி வாங்கிய இந்த விபத்தை ஏற்படுத்திய சதி கும்பலைத் தேடும் முயற்சியில் பொலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற தகவல்கள் இல்லாத நிலையில் போலி பாஸ்போர்ட் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
குறித்த விமானம் வீழ்ந்த 24 மணி நேரத்துக்குள் ஒன்றுக்கு முரண்பாடான தகவல்கள் வெளியாகி வருவதால் இவ்விபத்து பற்றி பல சந்தேகங்களும் அச்சமும் தோன்றியிருப்பதாக மலேசியா அறிவித்துள்ளது.
Published by

Leave a comment