-டீன்பைரூஸ்-
காத்தான்குடி: காத்தான்குடி 5 பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயலில் சுமார் ஒன்பது ஆண்டுகளின் பின் மீண்டும் ஜும்ஆ தொழுகை சென்ற (14.02.2014 வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜும்ஆ பிரசங்கம் மௌலவி அல்ஹாஜ் எச்.எம்.எம். இப்றாஹீம் (நத்வி) அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
ஜும்ஆதொழுகையின் பின்னர் மார்க்கச் சொற்பொழிவொன்று ஞானபிதா மௌலவி அல்ஹாஜ் AJ அப்துல் றஊப் (மிஸ்பாஹி) JP அவா்களினால் நிகழ்த்தப்பட்டது.
அவர் உரையாற்றுகையில்……
நாம் இந்த ஊரின் நன்மை கருதி சுமார் ஒன்பது ஆண்டுகளும் 8 மாதங்களும் பொறுமையோடு காத்திருந்தோம் அதன் விளைவுதான் இன்று நாம் ஜூம்ஆ தொழுகையினை தொழுது விட்டு இங்கு நாம் அமர்ந்திருக்கின்றோம்.இது என்னுடைய அல்லது உங்களுடைய கெட்டித்தனம் அல்ல மாறாக அல்லாஹூதஆலா தந்த வெற்றியாகும்.
அன்று சிவில் விமான போக்குவரத்து சபையின் தலைவராக இருந்த இந்நாள் பிரதியமைச்சர் கௌரவ தாஜூல் மில்லத் அல்ஹாஜ் MLA. முஹம்மது ஹிஸ்புல்லா MA/MP அவா்களின் தலைமையில் ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகளுக்கும், எமது பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயல் உலமாக்கள், முக்கியஸ்தா்களுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் அடிப்படையில் பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலின் கட்டுமான வேலைகள் முடிவுற்றதும் சுழற்சி முறையில் ஜும்ஆ வழங்குவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியோடு அது இன்று நிறைவேறி உள்ளது.
அது மாத்திரமல்ல 2009 ஆம் ஆண்டின் 46ம் இலக்க அல்ஹாஜ். அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு (கூட்டிணைத்தல்) என்ற சட்டம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற அனுமதியுடன் எமக்கு வழங்கப்பட்டுள்ளதினையும் நன்கு விளங்கிக் கொள்வதுடன் ஸூபீகளையும் ஸூன்னிகளையும் தொடர்ந்து துன்புறுத்தும் தீவிரவாதிகள் தமது தொழிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மௌலவி அப்துல் றஊப் (மிஸ்பாஹி) தெரிவித்தார்.
இவை அவர்களுக்கான இறுதி உபதேசமாகும். இதன் பிறகும் மார்க்கம் என்ற பெயரில் தீவிவாதிகள் தமது தொழிலை தொடர்ந்தால் அவர்களை இணம் கண்டு நீதி மன்றில் நிறுத்தி அரசிடம் நீதி கேட்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.
எமது அதிகார எல்லைக்குட்பட்ட தாபனங்களான…..,
- பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயல்.
- அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பேரவை.
- புனித குத்பிய்யா மஜ்லிஸ்.
- கரீப் நவாஸ் பௌண்டேஸன்.
- அல்ஜாமி அதுர் றப்பானிய்யா அறபுக் கலாபீடம்.
- மன்பவுல் ஹைறாத் மஸ்ஜித்.
- மன்பவுல் ஹைறாத் குர்ஆன் மதரசா.
- இப்றாஹீமிய்யா குர்ஆன் மதரசா.
- றஹ்மானிய்யா குர்ஆன் மதரசா.
- அஸ் ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீப்.
- அஸ் ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா குர்ஆன் மதரசா.
என்பன எமது தாபனங்களாகும்.
எனவே நாம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் மகத்தான சேவைகளை செய்து வருகின்றோம் என்பதனை யாரும் மறந்து விடக்கூடாது எனவும் தெரிவித்தார்.
காத்தான்குடியில் ஏற்பட்ட ஈமானிய புரட்சியின் போது மௌலவி அப்துல்றஊப் (மிஸ்பாஹி) தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்த முர்தத் பத்வாவினை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை விலக்கிக் கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நீண்ட நாட்களின் பின் ஜும்ஆ தொழுகை ஆரம்பிக்கப் பட்டதனால் சுமார் 5000 க்கும் மேற்பட்ட சகல தரப்பினர்களும் தொழுகையில் கலந்து கொண்டுள்ளனர். தொழுகைக்கு வந்தவர்களுக்கு குளிர்பானம் கொடுத்து வரவேற்பதினை காணக்கூடியதாக உள்ளது.
பிரதி வாரம் தோரும் ஜும்ஆ தொழுகை நடாத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





Leave a comment