கராச்சி: கடந்த எட்டு ஆண்டுகளில் ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளின் வழியாக கிடைத்த வசூலிலிருந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கான பங்குத் தொகையாக இந்திய ரூபாய் மதிப்பில் 374 கோடியே 13 லட்சம் பணத்தை ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குக் கொடுத்துள்ளது.
ஐசிசியின் புதிய முடிவின்படி இந்தத் தொகையானது பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுபோக பாதுகாப்பு காரணங்களுக்காக 2011ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது பாகிஸ்தானில் நடத்தவிருந்த போட்டிகளை ரத்து செய்ததற்காக தனியாக ரூ. 93.84 கோடி பணத்தையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி கொடுத்துள்ளது.
தனக்குக் கிடைக்கும் வசூல் பணத்தை உறுப்பு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் நலனுக்கும், கிரிக்கெட் வளர்ச்சிக்கும் பகிர்ந்தளித்து வருகிறது ஐசிசி. அந்த அடிப்படையில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இவ்வளவு பணம் தரப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கான பங்குத் தொகை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்குமாம். அதாவது 2015 முதல் 2023 காலகட்டத்தில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும்.
2015 முதல் 2020 வரையிலான ஐசிசி அட்டவணைக் காலத்தில் பாகிஸ்தானுக்கான தொகையானது ரூ. 623.55 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுதவிர பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும், ஐசிசிக்கும் இடையிலான தனிப்பட்ட இரு நபர் ஒப்பந்தப்படியும் அதற்கு கணிசமான தொகை கிடைக்கும்
பாகிஸ்தானில் சமீப ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதில்லை. தீவிரவாத அச்சுறுத்தல், பல நாடுகள் வர மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் போட்டிகள் நடத்தப்படாமல் உள்ளது.
இதன் காரணமாக பாகிஸ்தானுடன் விளையாட விரும்பும் அல்லது முன்வரும் நாடுகள் ‘நியூட்ரல்’ மைதானங்களான துபாய் அல்லது ஷார்ஜாவில்தான் பாகிஸ்தான் அணியுடன் விளையாடி வருகின்றன என்பது நினைவிருக்கலாம்.
Published by
![ICC-logo-lrg[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2011/10/icc-logo-lrg1.jpg?w=146&h=150)
Leave a comment