கொழும்பு: மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை பொறுத்தவரை அத் தண்டனையை சில விதிமுறைகளை அனுசரித்து ஆயுள் தண்டனையாக மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு விதந்துரைப்பதற்காக அத்தகைய குற்றவாளிகள் ஒவ்வொருவர் பற்றியும் உரிய ஆலோசனைகளைத் தமக்கு வழங்குமாறு நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அது சம்பந்தமாக நியமிக்கப்பட்டுள்ள குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பிரஸ்தாப குழுவினரின் அமர்வு நீதியமைச்சில் இடம்பெற்ற பொழுது அவர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 424 சிறைக்கைதிகள் உள்ளனர். அரசியலமைப்பின் 34(1) உறுப்புரைக்கு அமைவாக மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிபாரிசு செய்வதற்கு சம்பந்தப்பட்ட கைதிகள் ஒவ்வொருவரினதும் விடயங்களை தனித்தனியாக அலசி ஆராய்ந்து தமக்கு உரிய ஆலோசனைகளை வழங்குமாறு அமைச்சர் குழுவினரை கேட்டுக்கொண்டார்.
கொலைக் குற்றவாளிகளாக மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறை வாசம் அனுபவித்து வருபவர்கள் ஒவ்வொருவரினதும் வயது, மனநிலை மற்றும் அவர்கள் புரிந்த குற்றச்செயலின் பாரதூரத் தன்மை என்பவற்றின் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவர்கள் பற்றிய ஆலோசனை வழங்குமாறும் அமைச்சர் குழுவினரிடம் கூறினார்.
நீதியமைச்சர் நியமித்துள்ள இக் குழுவில் நீதி, சிறைச்சாலை துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன், உளநல மருத்துவ நிபுணர் ஒருவரும், சமூகவியல் பேராசிரியர் ஒருவரும், குற்றவியல் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
நீதியமைச்சில் நடைபெற்ற இக் குழுவின் அமர்வில் அதன் உறுப்பினர்களில் சிலரான இளைப்பாறிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜி.டபிள்யு. எதிரிசூரிய, நீதியமைச்சின் செயலாளர் திருமதி. கமலினி டி சில்வா, மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் வி.கே. மலல்கொட, சிறைச்சாலை சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் எம். விதானகே, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சி.பல்லேகம சார்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜி.பி. குலதுங்க மற்றும் உதவிச் செயலாளர் சட்டம் திருமதி. ஷியாமினி விஜேதுங்க (குழுவின் செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
Published by


Leave a comment