யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கே நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பும், வடமாகாண முதலமைச்சரும், வலியுறுத்தி வருகின்ற நிலையில், பல்லாயிரக் கணக்கில் அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கணிசமான அளவில் குறைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஞாயிறன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் நவீன வசதிகளைக் கொண்டதாகப் புதிதாக 450 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள வடமாகாணத்திற்கான முதலாவது புற்று நோய் வைத்தியசாலையை வைபவரீதியாகத் திறந்து உரையாற்றியபோதே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.
நாட்டின் தெற்கே தெய்வேந்திர முனையில் இருந்து வடக்கே பருத்தித்துறை வரையில் பிரமுகர்களாகிய நாதன் கணநாதன் மற்றும் சரித்த உனப்பவு ஆகியோரின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட நடைபயணம் ஒன்றின் மூலம் இதற்கான ஆரம்ப நிதி திரட்டப்பட்டிருந்தது. அவுஸ்திரேலியாவில் வசிக்கின்ற யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட டாக்டர் தினேஸ் சீவரட்னம் வழங்கிய மேலதிக நிதியுதவியைக் கொண்டு இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.
வன்முறையைக் கைவிட்டு, அதிகாரங்களைப் பகிர்ந்து வாழ வேண்டும் என்ற அபிலாசையுடன் இருக்கும் வடபகுதி மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஜனாதிபதி ஒத்துழைப்பார் என்று இந்த வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன், மொழியாலும் கலாசாரத்தினாலும் வேறுபட்டு, பெரும் எண்ணிக்கையில் வடபகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரால், தமிழ் மக்களின் பொருளாதாரம், பாதுகாப்பு என்பவற்றிற்குப் பங்கம் ஏற்பட்டிருப்பதுடன் அவர்களுடைய சுயகௌரவமும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் ஜனாதிபதிக்கு கூறி, இராணுவம் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு, தமது உரையில் பதிலளித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, யுத்தம் நடைபெற்றபோது, வடக்கில் மாத்திரம் 60 – 70 ஆயிரம் இராணுவத்தினர் அடிக்கொரு தூரத்தில் அமைந்திருந்த முகாம்களில் நிலைகொண்டிருந்தததை நினைவூட்டினார்.
அவ்வாறிருந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை இப்போது, 12 ஆயிரம் வரையில் குறைக்கப்பட்டிருக்கின்றது என்றும், பத்து பன்னிரண்டு முகாம்களிலேயே அவர்கள் இருக்கின்றார்கள் என்றும் ஜனாதிபதி கூறினார்.
நாடெங்கிலும் இராணுவம் இருப்பது அவசியம் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ”அதற்காக எந்த ஓர் இனத்துக்கும் மற்றதோர் இனத்தை அடிபணிய வைக்க முடியாது. அதற்கு ஒருபோதும் தாங்கள் இடமளிக்கப் போவதில்லை” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, வடமகாண ஆளுனர் சந்திரசிறி உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், அரச சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் அரச உயரதிகாரிகளும் வைத்தியத்துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
BBC Tamil
Published by


Leave a comment