தில்லையடி: கற்றவர்களே மாணவ சமூகத்திற்கு முன்மாதிரி மிக்கவர்களாக இருக்க வேண்டும் அதன் மூலம் அவர்களை அதன்பால் இட்டுச் செல்ல முடியும் என்று கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தில்லையடி சதாமியா புரத்தில் தெரிவித்தார்.
சதாமிய புரம் முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு விழா இன்று மாலை இடம் பெற்றது. வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசான்த, யாழ் மாநகர சபை உறுப்பினர் அஸ்கர் ரூமி உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு பேசுகையில் –
தான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த காலத்தில் யாழ், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு என்று பார்த்து பணியாற்றியதில்லை. இம்மாவட்டங்களில் உள்ள மக்களின் தேவைகளை இனம் கண்டு அவற்றை செய்தேன்.ஆனால் யாழ் மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளதாக எமது கட்சியின் பிரதி நிதிகள் என்னிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.அதனை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் கவனம் செலுத்திவருகின்றேன்.
குறிப்பாக மாணவ சமூகத்தின் கல்வி தொடர்பில் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும்.எதிர்கால சமூகத்தை நாம் சரியான பாதையில் இட்டுச் செல்ல வேண்டும்.அவர்கள் எமது நாட்டுக்கும் மக்களுக்கும் நற்பணியாற்றும் பதவிகளை வகிப்பதற்கு அடித்தளங்களை இந்த பாடசாலைகள் இடுகின்றது.இளம் பராயத்தில் மாணவர்களது உள்ளத்தில் கல்வியின் தாகத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தமது எதிர்கால இலக்கை இலகுவாக அடைந்து கொள்வார்கள் என்பது யதார்த்தமாகும்.
இன்றைய இந்த போட்டிகளில் மாணவர்களது திறமைகள் பாராட்டுக்குரியது என தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த மாணவர்களை பராமரித்து கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கு தமது வாழ்ததுக்களையும் தெரிவித்தார்.
Published by

Leave a comment