கொழும்பு: இந்த வருடத்தில் மேல் மாகாணத்திலுள்ள அநேகமான மார்க்கங்களில் பஸ் டிக்கெட்டுக்குப் பதிலாக முற்கொடுப்பனவு அட்டை முறையை அறிமுகப்படுத்த இருப்பதாக மேல் மாகாண போக்குவரத்து அமைச்சர், உபாலி கொடிகார தெரிவித்தார். இது தவிர சகல வீதிகளிலும் 15 ஆம் திகதி முதல் இ. போ. ச. தனியார் பஸ்களின் ஒருங் கிணைந்த சேவை ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் சகல பஸ்களும் இரவு 8.30 மணி வரை நேர அட்டவணைப்படி சேவையில் ஈடுபடுத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது –
முற்கொடுப்பனவு அட்டை முழுமையாக அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் பஸ் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வருமானம் இரட்டிப்பாவ தோடு பயணிகள் எதிர்நோக்கும் சிக்கல்களும் தீரும். மிகுதிப் பணம் வழங்காமை தொடர்பான பிரச்சினை இனிமேல் எழாது.
தென் ஆசியாவில் முதற் தடவையாக டிக்கெட்டுக்கு பதிலாக முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
மேல் மாகாண பயணிகள் போக்குரவத்து அதிகார சபையின் கீழ் 7400 பஸ்கள் உள்ளன. தினமும் 48 ஆயிரம் சேவைகள் இடம்பெறுகின்றது.
மக்களுக்கு சிறந்த சேவை அளிக்கும் வகையில் இந்த அட்டை முறை அறிமுகப்படுவதோடு ஒருங்கிணைந்த சேவையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்றார். மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் அமில ரன்மண்டல கூறியதாவது –
டிசம்பர் மாதத்தில் முற்கொடுப்பனவு அட்டை அறிமுகப்படுத்துவது குறித்து பஸ் உரிமையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டது. ஆரம்பத்தில் இந்த முறை குறித்து அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. தினமும் 1500 ரூபா வருமானம் பெற்ற பஸ் உரிமையாளர் ஒருவர் முற்கொடுப்பனவு அட்டைமுறை அறிமுகப்படுத்திய பின் 4000 ரூபா முதல் 4500 ரூபா வரை வருமானம் பெறுகிறார். ஒவ்வொரு நாளும் டிக்கட்டுக்கான தொகை உரிமையாளரின் கணக்கில் வைப்பாகும்.
இந்த முற்கொடுப்பு அட்டைகளை மீள்நிரப்பு (ரீலோட்) நிலையங்களில் பெற முடியும்.
அட்டையில் பணம் முடிந்தால் மீள் நிரப்ப முடியும். பஸ்களில் உள்ள டிக்கெட் இயந்திரத்தில் தாம் செல்லும் இடத்தை பயணிகளுக்கு பதிந்து தாம் செல்லும் இடத்துக்கு செல்ல முடியும்.
தற்பொழுது 138, 122, 125 மார்க்கங்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் 840 பஸ் உரிமையாளர்கள் முற்கொடுப்பனவு அட்டை முறையை அமுல் செய்ய முன்வந்துள்ளனர்.
இதற்கான டிக்கெட் இயந்திரம் மக்கள் வங்கியின் கடனுதவியுடன் பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக தினமும் 100 ரூபா அறவிடப்படுகிறது.
இது தவிர பஸ் சாரதிகளினதும் நடத்துநர்களிதும் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதிக்காக தலா நூறு ரூபா உரிமையாளரின் கணக்கிலிருந்து குறைக்கப்படும். பஸ்களிடம் சட்டபூர்வமற்ற முறையில் பணம் பெறப்படுவது இந்த முறை மூலம் நிறுத்தப்படும். மத்திய வங்கியின் கண்காணிப்புடன் இது முன்னெடுக் கப்படுகிறது.
பஸ் உரிமையாளர்கள் விருப்பத் துடனேயே இதில் இணைக்கப்படுகின்ற னர். முற்கொடுப்பனவு அட்டை முறைக்கு மாறுமாறு பஸ் உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள். புதிய டிக்கெட் இயந்திரத்தில் காசு கொடுத்தும் டிக்கெட் பெறலாம். முற்கொடுப்பனவு அட்டையை பாவிக்க விரும்பாவிடின் திருப்பி வழங்கி பணம் பெற முடியும் என்றார். TK
Published by

Leave a comment