மன்னார்: தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றத்தின் காரணமாக வடக்கில் பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும, கடும் காற்றின் காரணமாக வீடுகளின் கூரைகள் அல்லுன்று சென்றதையடுத்து பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான அவசர உதவிகளை உடன் வழங்குமாறு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
கடந்த சில தினங்களாக வடக்கில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காணப்படும் மழையினையடுத்து வவுனியாவிலுள்ள சில பகுதிகள் வெள்ளப்பாதிப்புக்குள்ளாகியுள்ளது தொடர்பில் தமது இணைப்பாளர்கள் அமைச்சரின் கவனதிற்கு கொண்டுவந்ததையடுத்து அமைச்சர் உடனடியாக அரசாங்க அதிபர்களுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைள் எடுக்குமாறு கேட்டுள்ளார்.
சில பகுதிகளில் வெள்ள நீர் தங்கி நிற்பதால் பொது மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளதால், அந்த நீரினை வெளியேற்றி மக்களின் வழமையான நிலையினை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையெடுக்குமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கேட்டுள்ளார்.
மக்கள் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் பட்சத்தில் அவர்களுக்கான நிவாரண மற்றும் பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவிகளை பெறுமாறும் இது குறித்து அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். இந்த நிலையில் இப்பிரதேசத்தில் காணப்படும் நிலை தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் கலந்துரையாடியுள்ளார்.
Published by

Leave a comment