சிகரம்: காத்தான்குடி பொலிஸ் பிரிவின் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள சிகரம் கிராமத்தில் பள்ளிவாயல்கள் சம்மேளனத்திற்கு சொந்தமான காணியின் சுற்று வேலி மற்றும் தற்காலிக வீடு என்பன புதன்கிழமை (1.1.2014) இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி கிராமத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கு சொந்தமான காணிக்குள் இன்று அதிகாலை நுழைந்த சிலர் அங்கு நிர்மானிக்கப்பட்டிருந்த தற்காலிக வீடு மற்றும் அந்த காணியின் சுற்று வேலி என்பவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதன் போது அங்கு தங்கியிருந்தவர்கள் பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து பொலிசார் அங்கு விரைந்து நிலைமைகளை பார்வையிட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து அங்கு சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் சேதப்படுத்தப்பட்ட பகுதியினை பார்வையிட்டதுடன் சிகரம் கிராம மக்களுடனும் கலந்துரையாடினார்.
இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கையினை எடுக்குமாறு பொலிசாருடன் பேசியுள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
Published by

Leave a comment