காத்தான்குடி: 2012, 2013 ம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான இலவச உயர் கல்வி, தொழில் வழிகாட்டல் தொடர்பான கருத்தரங்கு ஒன்று இலங்கை தென்கிழக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றியம் – காத்தான்குடி (SUGAK) அமைப்பினால் 27-12-2013ம் திகதி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி மத்திய கல்லூரி பரீட் மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை தென்கிழக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றியம்-காத்தான்குடி அமைப்பின் தலைவர் எம்.இஸட்.துல்கிப்லி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிறப்பு வளவாளர்களாக கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியான்டு மாணவர் எம்.ஐ.எம். இல்ஹாம் அவர்களும், பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் எம்.டி. பர்ஹான் அவர்களும், மற்றும் தென்கிழக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் அதன் உறுப்பினர்களும், மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர் எம்.எஸ்.எம்.சப்னியினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவர் எம்.ஐ.எம்.இல்ஹாம், பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் எம்.டி.பர்ஹான், தென்கிழக்கு பல்கலைகழக முகாமைத்துவ பீட மாணவர எம்.ஜே.அப்துல் பாஸித், தென்கிழக்கு பல்கலைக்கழக கணணி விஞ்ஞான துறை மாணவனான பி.டி.எம்.இம்தியாஸ் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக மூன்றாமாண்டு மாணவரும்; அமைப்பின் தலைவருமான எம்.இஸட். துல்கிப்லி ஆகியோரினால் பல்வேறு தலைப்புக்களில் விரிவுரைகள் நடாத்தப்பட்டது.
இதன் போது மாணவர்கள், பெற்றோர்களின் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கான தீர்வுகளும் வழங்கப்பட்டது.
Published by

Leave a comment