லண்டன்: பிரிட்டனின் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் நிறுவனத்தில், வாடிக்கையாளர் ஒருவருக்கு, தனது மத நம்பிக்கை காரணமாக மது விற்க ஒரு முஸ்லிம் ஊழியர் மறுத்த சம்பத்தை அடுத்து அந்நிறுவனம் மன்னிப்பு கோரியிருக்கிறது.
லண்டனில் உள்ள இந்நிறுவனத்தின் ஒரு கிளையில், வாடிக்கையாளர் ஒருவர் ஷாம்பெயின் ( ஒரு வகை பிரெஞ்சு ஒயின்- French Wine) வாங்க முற்பட்டபோது, அதை அவருக்கு விற்க, விற்பனை ஊழியராக இருந்த ஒருவர் மறுத்தாராம். அந்தப் பெண் ஊழியர், மிகவும் மன்னிப்புக் கோரியதாகவும், ஆனால் தன்னால் அந்த மதுவை அவருக்கு விற்க முடியாது என்றும் , வேறொரு, விற்பனை ஊழியரை அணுகி அதை வாங்கிக்கொள்ளுமாறும் கூறியதாக அந்த வாடிக்கையாளர், லண்டனிலிருந்து வெளியாகும் “தெ டெலெகிராப்” பத்திரிகையிடம் கூறியிருந்தார்.
நம்பிக்கைகளுக்கு இடமளிக்கிறோம்-நிறுவனம்
தாங்கள் பொதுவாக, மத நம்பிக்கைகள் காரணமாக சில பொருட்களைக் கையாள முடியாத தங்கள் ஊழியர்களுக்கு, அவர்களுக்குப் பொருத்தமான வேலைகளைத் தருவதாக மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் நிறுவனம் கூறியிருக்கிறது.
இது போன்ற ஊழியர்களுக்கு ஆடைகளை விற்கும் பகுதிகளிலோ அல்லது ரொட்டிப் பொருட்கள் ( பேக்கரி) விற்கும் பிரிவு போன்ற பகுதிகளிலோ வேலை தரப்படுவதாக அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.
இந்தக் கொள்கை, குறிப்பிட இந்தச் சம்பவத்தில், கடைப்பிடிக்கப்படவில்லை என்று அது கூறியிருக்கிறது.
இது போல வேறு சில நிறுவனங்களும் , தங்கள் நிறுவனங்களில் வேலை செய்யும் முஸ்லிம் ஊழியர்களுக்கு, மது அல்லது பன்றி இறைச்சி விற்பனை வேலைகளை அவர்கள் விரும்பாவிட்டால் தருவதில்லை என்று கூறின.
இது போல மற்ற மதத்தினருக்கும் விதி விலக்கு அளிக்கப்படுகிறது என்று அந்நிறுவனங்கள் கூறுகின்றன.
ஆனால் மற்றுமொரு பிரிட்டிஷ் நிறுவனமான, ஜான் லூயிஸ் இது போன்ற கொள்கை தனது நிறுவனத்தில் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று கூறியிருக்கிறது. நிறுவன ஊழியர்கள் இது போல வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் பொருட்களை விற்க மறுக்க உரிமை தரப்படுவது சரியல்ல என்று அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆண்டி ஸ்ட்ரீட் ரேடியோ 5 நிகழ்ச்சியின்போது கூறினார்.
BBC Tamil
Published by

Leave a comment