கோழைத்தனமாக நாட்டை விட்டு தப்பியோட மாட்டேன், எனக்கு மன்னிப்பு வழங்குங்கள்: முஷரப்

19-musharraf13-300[1]– SHM

இஸ்லாமாபாத்: தான் அதிபராக இருந்த 9 ஆண்டுகளில் தவறு செய்திருந்தால் அவற்றை மன்னித்துக் கொள்ளுமாறும், தான் நாட்டை விட்டு ஓடிவிட மாட்டேன் என்றும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தி சேவை ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்,

‘நான் என்னவெல்லாம் செய்தேனோ அவை எல்லாம் நாட்டுக்காகத் தான் செய்தேன். அது தவறாக இருக்கலாம். ஆனால் அதில் எந்த தவறான நோக்கமும் இல்லை. அப்படியும் நான் தவறு செய்தேன் என்று சிலர் நினைத்தால் எனக்கு மன்னிப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை சந்தித்து அவற்றில் இருந்து குற்றமற்றவனாக வருவேன். பயந்துபோய் கோழைத்தனமாக நாட்டைவிட்டு ஓடிவிட மாட்டேன்.

தலிபான்கள் மற்றும் போராளிகள் அமைப்புகள் முன்பு எங்களை விட்டுவிடுங்கள் என்று பிச்சை கேட்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றது அரசு, முடியாது என்றனர் தலிபான்கள்.

எதிர்காலத்தில் பாகிஸ்தானை ஆளும் வாய்ப்பு கிடைத்தால், நாட்டுக்கு எதுவெல்லாம் செய்தால் நன்மையோ அவற்றை எல்லாம் செய்வேன். என்னால் தான் நாட்டில் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன. நான் எடுத்த நடவடிக்கைகளால் பெண்கள் முன்னேற்றம் அடைந்தனர்.மேலும் சிறுபான்மையினருக்கு உரிமைகள் கிடைத்தது’ என்றார்.

முஷாரப் மீது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை கொலை செய்தது உள்பட 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் வைக்கப்பட்டார்.

பின்னர் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்றார். 1999ம் ஆண்டு நவாஸ் ஷரீப் ஆட்சியை கவிழ்த்து பதவிக்கு வந்தவர் முஷரப்.

பாகிஸ்தான் வரலாற்றில் சதி செய்ததற்காக வழக்கை சந்திக்கும் முதல் சர்வாதிகாரி முஷாரப் தான். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை கிடைக்கும்.

Published by

Leave a comment