நானாட்டான் பிரதேச செயலகம் மீது தாக்குதல் விளக்கமறியல் நீடிப்பு!

unnamed (7)மன்னார் அம்பி

மன்னார்: மன்னார், நானாட்டான் பிரதேச செயலகம் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 பேருக்கான விளக்கமறியலை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்க மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

நானாட்டான் பிரதேச செயலகம் மீது கடந்த 9ஆம் திகதி தாக்குதல்களை மேற்கொண்டதாக கூறி பொன்தீவு கண்டல் கிராமத்தைச் சேர்ந்த 65 பேரை முருங்கன் பொலிஸார் கைது செய்து கடந்த 15 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ, 18பேரை இன்று 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு ஏனைய 47 பேரையும் தலா 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததோடு குறித்த 47 பேரையும் இன்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டிருந்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 பேரும் இன்று புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் குறித்த 18 பேரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட 47 பேரும் மன்றில் ஆஜராகியிருந்த நிலையில் அவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Published by

Leave a comment