கொழும்பு: தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் களை புதிய பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் மற்றும் க.பொ.த. உயர்தர மாணவர்களின் பெறுபேறுகள் ஆகியன கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் வெளியிடப்படுமென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகள் என்பன ஏற்கனவே தயாராகியுள்ள போதும், தற்போது அவை மீள் பரி சீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். இதற்காக கல்விய மைச்சினதும் பரீட்சைகள் திணைக்களத்தினதும் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை புதிய பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கிடைக்கப் பெற்றிருக்கும் விண்ணப்பங்களுக்கமைய கல்வியமைச்சு வெட்டுப்புள்ளிகளை தயாரித்து மீள்பரிசீலனை செய்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை ஏற்கனவே கணனி உதவியுடன் கணிப்பிடப்பட்டிருக்கும் இஸட் புள்ளிகள் ஒவ்வொன்றினையும் தாமாகவே மீண்டுமொரு முறை சுயமாக கணிப்பீட்டிற்கு உட்படுத்தி வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.ஜே.எம். புஸ்பகுமார தெரிவித்தார்.
மேலும் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் முன்கூட்டியே உயர்தரப் பெறுபேறுகள் மற்றும் தரம் 05 மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடக் கூடியதாகவுள்ளதெனவும் அமைச்சர் கூறினார்.
Published by

Leave a comment