ஹராரே: குறித்த காலத்தில் சம்பளம் வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் பணி நிறுத்தத்தில் குதிக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீரர்களுக்கு சம்பளம் வழங்க சிம்பாப்வே கிரிக்கெட் சபை நிர்ணயித்த இறுதித் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் சிம்பாப்வே உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிரோ 50 போட்டியில் பங்கேற்க குறித்த வீரர்கள் மைதானத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளபோதும் தமது நிலுவை தொகையை வழங்கும் வரை களத்தில் இறங்குவதைப் புறக்கணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பாப்வே சபையுடனான ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரியவருகிறது. அதே போன்று முதல் தரப் போட்டிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் வீரர்களின் சம்பள நிலுவை இரு மாதங்கள் தாமதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிம்பாப்வே கிரிக்கெட் சபை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் மேலதிகமாக 3 மில்லியன் டொலர் கடனுதவியைக் கோரியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஆரம்பத்தில் சிம்பாப்வேக்கு வழங்கிய நிதிக்கு, கணக்காய்வு அறிக்கையைத் தந்த பின்னரே புதிய கடன் குறித்து இணக்கம் ஏற்பட முடியும் என ஐ. சி. சி. தரப்பு நிபந்தனை விதித்துள்ளது. செயல்திறன் மற்றும் உதவித் தொகையாக சிம்பாப்வேக்கு முன்னர் வழங்கிய நிதியின் அதிக தொகையை முன்னர் நடந்த பாகிஸ்தான் தொடரை புறக்கணிக்கும் வீரர்களின் அச்சுறுத்தலை தவிர்க்க அவர்களுக்கு சம்பளமாக வழங்கியிருப்பதாகத் தெரியவருகிறது.
பாகிஸ்தான் தொடரில் சம்பள பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் கடந்த ஓகஸ்டில் ஒன்றியம் ஒன்றை நிறுவினர். சிம்பாப்வே கிரிக்கெட் சபையின் பொருளாதார நிலைகாரணமாக கடந்த ஒக்டோபரில் சிம்பாப்வே அணியில் இலங்கை சுற்றுப் பயணமும் ஒத்திப்போனது. இந்தத் தொடர் தள்ளிப்போனதால் சிம்பாப்வே அணி கடந்த செப்டெம்பரில் இருந்து எதிர்வரும் பெப்ரவரி வரையில் போட்டியின்றி உள்ளது. போதிய பயிற்சி இல்லாத சூழலிலேயே அணி பங்களாதேஷில் நடைபெறும் இருபது- 20 உலகக் கிண்ணத்தில் விளையாடத் திட்டமிட்டுள்ளது.tk
Leave a comment