மட்டக்களப்பு: கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு சிலர் முயற்சி செய்வதாகவும் அதனை தடுத்து நிறுத்தி பல்கலைகழகத்தில் கடமையாற்றும் தகமையற்ற கல்விசார் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு கோரியும் மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு அரசடியில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை நண்பகல் நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சகல சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏதிர்ப்பு போரட்டம் அல்ல உரிமைக்கான விண்ணப்பம், சதா என்னும் பீடை பீடத்தில் எதற்கு,எங்கள் எதிர்காலம் பீடாதிபதிகளின் கைகளில், பீடைகளை ஒழிப்போம் பீடத்தினைக்காப்போம், தொல்லை கொடுப்பவனே தொலைந்து போ, போன்ற தமிழ்,சிங்கள மொழிகளில் பல்வேறு பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

Leave a comment