சாவகச்சேரி: இலங்கையில் போர் தீவிரமடைந்திருந்த காலத்தில் அதைப் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக சாவகச்சேரி நகரசபைக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீரரான முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில் நேற்று அவருக்கு எதிராக சாவகச்சேரி நகர சபைக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில், போர்க் காலத்தில் மக்களின் மனதைப் புண் படுத்தியதால், இனி வரும் காலங்களில் வடக்குப் பகுதியில் முரளிதரன் பயிற்சியில் ஈடுபட எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றவர் முத்தையா முரளிதரன். இலங்கையில் போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது இவர் வெளிநாடுகளில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
எனவே, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று சாவகச்சேரி நகர சபையில் உறுப்பினர் பி.ஸ்ரீதரன் முன்மொழிய மற்றொரு உறுப்பினர் கிஷோர் வழிமொழிய முரளிதரனுக்கு எதிரான கண்டன தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்தக் கண்டனத் தீர்மானத்தில், ‘முத்தையா முரளிதரன் வெளிநாடுகளில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிந்த போது வடக்கில் மக்கள் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர். அப்போது பெருமளவில் ஆண்களும் பெண்களும் காணாமல் போயினர். முரளிதரன் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இனி வரும் காலங்களில் முரளிதரன் வடக்கில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும்போது எதிர்ப்பை வெளியிடுவதென்றும் அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதே போல துணுக்காய் பிரதேச சபையிலும் முரளி தரனுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மேலும் தெரியவருகிறது.

Leave a comment