மும்பை: மும்பையிலுள்ள நடிகை ஸ்ருதிஹாசனின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அவரை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனின் மகளும், முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பரபரப்பாக நடித்து வருகிறார். தற்போது ‘வெல்கம் பேக்’ என்ற இந்தி படத்திலும், ‘ரேஸ் கௌரம்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
ஸ்ருதிஹாசன் ஹிந்தியில் படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதனால் மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் ஒரு நபர் கடந்த ஒரு வருடமாகவே, மும்பையில் ஸ்ருதிஹாசனை பின் தொடர்ந்து இருக்கிறார். ‘ராமைய்யா வஸ்தாவய்யா” என்ற ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பிற்கு வந்த அந்த நபரை, படக்குழு விரட்டியிருக்கிறது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஸ்ருதி தங்கியிருந்த வீட்டு அழைப்பு மணி ஒலிக்க, பாதி தூக்க கலக்கத்துடன் கதவைத் திறந்துள்ளார். சட்டென்று உள்ளே நுழைந்த அந்த மர்ம நபர், அவரைக் கட்டிப்பிடித்து, கழுத்தை நெரிக்க முயன்றுள்ளார்.
உடனே சுதாகரித்துக் கொண்ட ஸ்ருதி, அந்த நபரை பலமாக வெளியில் தள்ளி கதவை தாழிட முயன்றாராம். அதேநேரம் பலமாகக் குரலெழுப்பி வீட்டின் காவலாளிகளை அழைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த காவலாளிகள் அந்த நபரைப் பிடித்து விரட்டியடித்துள்ளனர்.
இந்த சம்பவம், பொலிவுட் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, ஸ்ருதியின் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், பொலிசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. ஸ்ருதி பாதுகாப்பாக உள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்ருதிஹாசன் ‘நான் நலமாக இருக்கிறேன். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி” என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Leave a reply to Hakim Cancel reply