பீஜிங்: இறந்து விட்டதாக மருத்துவமனையில் சான்றிதழ் அளிக்கப் பட்ட ஒருமாதக் குழந்தை புதைப்பதற்காகக் கொண்டு சென்ற போது, உடலில் அசைவு உண்டானது. இதனைத் தொடர்ந்து உயிருடன் இருந்தக் குழந்தையை இறந்ததாக சான்றிதழ் கொடுத்த வைத்தியர் ‘சஸ்பெண்ட்’ செய்யப் பட்டுள்ளார்.
கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பிறக்கும் போதே குழந்தைக்கு சுவாசக் கோளாறு இருந்ததை கண்டறிந்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப் பட்டும், கடந்த 12ம் தேதி குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.
அதனைத் தொடர்ந்து அக்குழந்தைக்கு இறப்புச் சான்றிதழ் அளிக்கப் பட்டது. உடலைப் பெற்றுக் கொண்ட அதன் பெற்றோர், உரிய சடங்குகள் செய்து குழந்தையை புதைக்க முடிவு செய்தனர். அப்போது திடீரென குழந்தையின் உடல் அசைவதைக் கண்ட உறவினர்கள், உடனடியாக குழந்தையை அன்ஹுய் மாகாண அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு உயிர் இருப்பதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, உயிர் காக்கும் கருவிகளின் துணையுடன் அந்த குழந்தை காப்பாற்றப்பட்டது.
குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் உயிருடன் உள்ள குழந்தை இறந்து விட்டதாக சான்றிதழ் தந்த வைத்தியர் மற்றும் தாதி ஆகியோர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
![India-China-border-dispute[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/india-china-border-dispute1.png?w=150&h=89)
Leave a comment