ஐ.பி.எல். கிரிக்கட் போட்டிகள் இலங்கையில்?

ipl– SHM

மும்பை: 20 ஓவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை அடுத்த ஆண்டு இலங்கை அல்லது தென்னாப்பிரிக்காவில் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போட்டிகள் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்தியாவில் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றதால் தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

இதனா; அடுத்த ஆண்டுக்கான 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை நடத்தும் இடங்கள் குறித்து ஆலோசனை செய்ய ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டம் இந்திய கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் ரஞ்சிப் பிஸ்வால் தலைமையில் மும்பையில் நடைபெற்றது.

சஹாரா புனே வாரியர்ஸ் அணி அண்மையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டதால் அடுத்த ஆண்டு போட்டியில் 8 அணிகள் மோதும் என்று தெரிகிறது.

இந்த போட்டியில் மாலை நேரத்தில் நடைபெறும் ஆட்டங்களை குறைக்கலாம் என்று போட்டி அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இரவில் நடந்தால் அதிக ரசிகர்களை ஈர்க்க முடியும் என்பதாலும், கோடைக்காலத்தில் மாலை நேரத்தில் வீரர்கள் விளையாடுவதற்கு சிரமமாக இருக்கும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி நடைபெறும் காலத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. இதனால் பாதுகாப்பு கொடுப்பதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இதனால் ஐபிஎல் போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்றலாமா? என்பது குறித்தும் ஐ.பி.எல்.நிர்வாக குழுவினர் விவாதித்தனர். இந்த விஷயத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகே இறுதி முடிவு செய்யலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

2009-ம் ஆண்டை போல் ஐ.பி.எல். போட்டிகளை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் அடுத்த ஆண்டு இலங்கை அல்லது மலேசியாவில் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by

Leave a comment