மொஸ்கோ: ரஷியாவில் போயிங் ரக விமானம் ஒன்று, காசன் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது, தீப்பிடித்து எரிந்ததில் 50 பேர் உயிரிழந்தனர். ரஷிய தலைநகர் மொஸ்கோவில் இருந்து போயிங் 737 ரக விமானம் விமானி, ஊழியர்கள் 6 பேர் மற்றும் பயணிகள் 44 பேருடன் மேற்கு ரஷியாவில் உள்ள டாடர்ஸ்டன் மாகாண தலைநகர் காசன் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது.
அந்த விமானம் நேற்றிரவு 7.25 மணிக்கு காசன் விமான நிலையம் அருகே சென்றது. பின்னர் அங்கு தரை இறங்க விமானி முயற்சி மேற்கொண்டார். ஆனால் உடனடியாக தரை இறங்க முடியவில்லை. தொடர்ச்சியாக 3 முறை முயற்சித்தார். எனினும், தரை இறங்க முடியவில்லை.
4-வது முறையாக விமானத்தை காசன் விமானநிலைய ஓடு பாதையில் தரை இறக்க முயன்றபோது, அது தரையில் பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் தங்களது உயிரைக் காப்பாற்றும்படி அலறினார்கள். எனினும், விபத்து நடந்த சிறிது நேரத்தில் விமானத்தில் இருந்த 50 பேரும் உயிரிழந்தனர்.
Leave a comment