நியுயோர்க்: அமெரிக்காவிலேயே மிகவும் உயர்ந்த கட்டிடமாக நியுயோர்க் நகரில் கட்டப்பட்டுள்ள புதிய உலக வர்த்தக மையம் அறிவிக்கப் பட்டுள்ளது.கடந்த 2001ம் ஆண்டு அல்கொய்தா நடத்தியத் தாக்குதலில் இரட்டை கோபுரம் என்ற பெயரில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் கம்பீரமாக தலை நிமிர்ந்து நின்ற உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டது.
இந்த கோர தாக்குதலில் சிக்கி சுமார் 19 தீவிரவாதிகள் உள்பட 2996 பேர் பலியானார்கள். இந்நிலையில், இரட்டைக் கோபுரம் இருந்த அதே இடத்தில் அதற்கு இணையாக உருவாக்கப் பட்டுள்ள புதிய கட்டிடம் அமெரிக்காவிலேயே மிக உயரமான கட்டிடம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதலில் சிதைந்து போயிருந்த பழைய வர்த்தக கட்டிடத்தை முழுவதுமாக இடித்து அங்கு புதிய கட்டிடம் கட்ட தீர்மானித்தது அமெரிக்கா.
அதன்படி, கடந்த 2006ம் ஆண்டு துவக்கப் பட்ட புதிய உலக வர்த்தக மையக் கட்டிடப் பணி, தற்போது முழுவதுமாக தயாராகி விட்டது.
408 அடி கூம்பு பகுதியுடன் ஆயிரத்து 776 அடி உயரத்தில் வானளாவ உயர்ந்துள்ள இந்த கட்டிடம் அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற சிறப்பிடத்தை பிடித்துள்ளது.
இதற்கு முன்னர் வரை சிகாகோ நகரின் வில்லிஸ் கோபுரம் தான் அமெரிக்காவின் உயரமான கட்டிடம் என்ற பெருமையப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment