– பழுளுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: பொது நலவாய மாநாட்டு அரச தலைவர்கள் இன்று மட்டக்களப்புக்கு செய்யவிருந்த விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்தார். குறித்த விஜயம் இரத்துத் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேறு இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாலேயே குறித்த விஜயம் இரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொது நலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் இருபது நாடுகளின் அரச தலைவர்கள் மட்டக்களப்புக்கு இன்று புதன்கிழமை 2.30மணிக்கு வருகை தந்து இரண்டு தினங்கள் மட்டக்களப்பில் தங்கியிருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிடயிருந்தனர்.
இவ்வாறிருக்கையிலேயே குறித்த விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்புக்கு வருகை தரவிருந்த பொது நலவாய மாநாட்டு அரச தலைவர்களின் வருகையையொட்டி மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் சிவில் சமூக அமைப்பு என்பன பாரிய ஏற்பாடுகளை செய்திருந்ததாகவும் இந் நிலையில் இவர்களின் வருகை இரத்துச் செய்யப்பட்டமை எமக்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் ஏற்பாட்டாளார்கள் தெரிவித்தனர்.
இவர்களின் வருகையை யொட்டி மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்டத்திலுள்ள படை அதிகாரிகளுடன் இணைந்து இவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை விரிவாக மேற் கொண்டிருந்தோம். இறுதி நேரத்தில் இவர்களின் மட்டக்களப்பு பயணம் இரத்துச் செய்யப்பட்டமை வேதனையை தருவதுடன் கவலையளிக்கின்றது என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
ஏற்கனவே மட்டக்களப்புக்கு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் உட்பட வெளிநாட்டு அரச தலைவர்கள் வருகை தருவதாக கூறப்பட்டு அதற்காக இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதுவர் மற்றும் பொதுநலவாய மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்து பார்வையிட்டு சென்றிருந்தனர்.
அதன் பின்னர் இளவரசர் சார்ள்ஸ் வருவதில்லை என தெரிவிக்கப்பட்டு பொது நலவாய மாநட்டில் கலந்து கொள்ளும் இருபது நாடுகளின் அரச தலைவர்கள் இன்று பிற்பகல் மட்டக்களப்புக்கு விசேட விமானம் மூலம் வருகை தருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மட்டக்களப்பு விமான நிலையத்தை வந்தடையும் குழுவினர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment