– காத்தான்குடி முபா
பேனாவுக்கு
உயிர் உண்டு என்கிறேன் நான்…
பேனா…
உலகின் அபார கண்டுபிடிப்பு…
இறைவனின் அருட்கொடை…
இரத்தம் உயிரின் ஒரு பக்கம்
பேனா உயிரின் மறுபக்கம்
மனிதன் இரத்தம் சிந்துகிறான்…
பேனா மை சிந்துகிறது…
இரத்தத்துக்கும் வகையுண்டு…நிறமுண்டு…
பேனாவுக்கும் வகையுண்டு…நிறமுண்டு…
இந்த உலகில் ஆயுதங்கள் ஏற்படுத்திய
புரட்சியைவிட
பேனாக்கள் ஏற்படுத்திய
புரட்சிகளே அதிகம்….
கையெழுத்து ஒருவனின்
இருப்பையே கேள்விக்குறியாக்கும்…
பேனா ஒரு நாட்டின்
தலையெழுத்தையே மாற்றிவிடும்…
மனிதனின் இரத்த ஓட்டம் நின்றுவிட்டால்
வீடு கூடி அழுவார்கள்…
பேனாவின் எழுத்தோட்டம் நின்றுவிட்டால்
சமூகமே வீதிக்கு வந்துவிடும்…
இரத்தம் நிலத்தில் சிந்தப்பட்டபோது
மனிதம் மடிந்து போனது…
பேனா மை சிந்தப்பட்டபோது
மனிதம் தலைநிமிர்ந்தது!
பேனா சமூகத்தின் காவல் நாய்!
அதற்கு குரைக்கவும் தெரியும்
குதறவும் தெரியும்…
பெண் என்றால் பேயும் இரங்கும்…
பேனா என்றால் பேயும் நடுங்கும்!
பேனா…
எப்போது எழுதுவதை நிறுத்துகிறதோ….
அப்போது இந்த உலகம் அழியும்!
(முஹம்மத் பாயிஸ்- KSA)

Leave a comment