மும்பை: மும்பையில் ஒரு இரண்டு படுக்கை அறை அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு விற்பனைக்கு வந்துள்ளது. அதுதொடர்பான விளம்பரத்தில் என்னென்ன வசதிகள் வீட்டில் உள்ளன என்பதைக் குறிப்பிட்டுள்ள விளம்பரதாரர், கூடவே ‘முஸ்லீம்களுக்கு வீடு விற்கப்பட மாட்டாது’ என்றும் கூறி தனது மத வெறியை வெளிப்படுத்தியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சில ஊர்களில் அசைவப் பிரியர்களுக்கு வீடு கிடையாது, பிராமணர்களுக்கு மட்டும் என்று ‘டூ லெட்’ விளம்பரங்களைப் போன்று, முஸ்லீம்களுக்கு வீடு கிடையாது என்று பகிரங்கமாக இணையதளத்தில் விளம்பரம் வெளியாகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பிரபலமான இணையதளத்தில்தான் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. அக்டோபர் 27ம் தேதி இந்த விளம்பரத்தைப் போட்டுள்ளனர்.
இந்த வீடு இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடாகும். வீட்டின் விலை ரூ. 3 கோடி. கார் ‘பார்க்கிங்’ உள்ளிட்ட வசதிகள் உள்ளதாக விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளனர். கூடவே ‘நோ முஸ்லீம்ஸ்’ என்றும் வாசகத்தைச் சேர்த்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து சமூக சேவகரும், வழக்கறிஞருமான சேஷாத் பூனாவாலா தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், இந்த வீடு குறித்த விளம்பரத்தை பிரசுரித்த புரோக்கர், இணையதளம் ஆகியோர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூனாவாலா கூறுகையில்,
இந்த விளம்பரம் மிகவும் விபரீதமானது. சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல். இந்த விளம்பரத்தைப் போட்டதற்காக குறித்த இணையதளம் பகிரங்கமாக முஸ்லீம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விளம்பரத்திற்கு எதிராக மதச்சார்பின்மையாளர்கள் கொந்தளிப்படைந்துள்ளனர். முஸ்லீம் மக்கள் மனதளவில் புண்பட்டுள்ளனர்.
இந்த சர்ச்சை விளம்பரம் குறித்து சம்பந்தப்பட்ட இணையதளம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘எங்களது தளத்தில் வெளியாகும் விளம்பரங்களை மிகவும் கவனத்துடன்தான் சோதித்து அனுமதிக்கிறோம். ஆனால் எங்களது தளத்தை தவறான ஒரு விளம்பரத்திற்கு பயன்படுத்த வழி ஏற்பட்டு விட்டது என்பதை அறிந்து மிகவும் வருத்தப்படுகிறோம்’ என்று கூறியுள்ளது.
அதேசமயம் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு வீடுகளை வாடகைக்கு விடுவது, விற்பது போன்றவற்றில் மும்பையைச் சேர்ந்த பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள், முஸ்லீம்களை ஒதுக்கி வருவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியெல்லாமா மதவெறியைக் காட்டுவது… வெட்கக் கேடு.
இந்த நிலையில் தற்போது அந்த சர்ச்சைக்குரிய வாசகத்தை சம்பந்தப்பட்ட இணையதளம் நீக்கியுள்ளது. அந்த விளம்பரம் தொடர்ந்து தளத்தில் உள்ளது.



Leave a comment