நியுயோர்க்: கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடனை காட்டிக்கொடுத்ததாக கூறி அமெரிக்க நாட்டவர் ஒருவர் அதற்கான 25 மில்லியன் டொலர் சன்மானத்தை கோரியுள்ளார். அமெரிக்காவின் மிசிகன் மாநிலத்தைச் சேர்ந்த 63 வயதான டொம் லீ என்பவரே ஒசாமாவின் தலைக்கு நிர்ணயிக்கப்பட்ட மேற்படி தொகைக்கு உரிமை கோரியுள்ளார்.
இது குறித்து அவரது வழக்கறிஞர் அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுப் பிரிவின் இயக்குனர் ஜேம்ஸ் கொமியிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கடந்த 2003 ஆம் ஆண்டிலேயே ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் இருப்பதை தாம் எப்.பி.ஐக்கு கூறியதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உளவுப் பிரிவைச் சேர்ந்த தனது குடும்ப அங்கத்தவர் மூலம் தாம் அந்த தகவலை பெற்றதாக எகிப்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க பிரஜையான லீ குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஒசாமா பின்லாடன் தங்கி இருந்த அபோதாபாத் வளாகம் 2005 ஆம் ஆண்டிலேயே கட்டப்பட்டதாகவும் அந்த ஆண்டின் கோடை காலத்திலேயே ஒசாமா அங்கு குடியேறியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தனர்.
– தினகரன்
Leave a comment