காத்தான்குடி: வாரஉரைகல் பிரதம ஆசிரியர் புவி ரஹ்மதுல்லாஹ் இன்று காலை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். இவ்விடயம் ஊரில் ஆரம்பத்தில் இன்று பரபரப்பாக பேசப்பட்டாலும், உத்தியோகபூர்வமற்ற செய்தியாக நான்கு சுவர்களுக்குள் பின்னர் மறைக்கப்பட்டுப் போனதொரு விடயமாக மக்கள் மத்தியில் திரிபுபடுத்தப்பட்டிருக்கின்றது.
கஞ்சாவை தனது வீட்டில் மறைத்துவைத்திருப்பதாகவும், அதனை தேடுவதற்கு வந்திருப்பதாகவும் புவி ரஹ்மதுல்லாஹ்வின் வீட்டிற்கு பரிசோதிக்க வந்திருந்த பொலிஸார் தெரிவித்திருந்தனர். அதன் பின்னர் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா கைப்பற்றப்பட்டு, இதனடிப்படையில் வார உரைகல் பிரதம ஆசிரியர் கைது செய்யப்பட்டு, பின்னர் இரண்டு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், மேலதிக வழக்கு விசாரணைக்கும் புவி ரஹ்மதுல்லாஹ்வுக்கு அழைப்பாணை விடுவிக்கப்பட்டும் இருக்கின்றது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அண்மைக்காலமாக காத்தான்குடியில் தாக்கப்பட்டு வரும் பொதுமக்களில் புவி ரஹ்மதுல்லாஹ்வும் ஒருவர். உண்மையை மறைக்காமல் செய்திகளை வெளியிடுவதால் மாத்திரம் அண்மைக்காலமாக அரசியல் பழிவாங்களுக்கும், கொலை மிரட்டல்களுக்கும் புவி ரஹ்மதுல்லாஹ் உட்படுத்தப்பட்டு வருவது உலகறிந்த விடயம்.
காத்தான்குடி அரசியல் சரித்திரத்தில் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களின் தேர்தலுக்கான காலூன்றலில் இருந்து ஆரம்பித்த அரசியல் அநாகரீகம் இன்றுவரை தொடர்ந்து கொண்டு இருப்பது 100 வீதம் முஸ்லிம்கள் வாழும் காத்த மண்ணுக்கு ஆரோக்கியமானதல்ல!

அரசியல் பழிவாங்கல்களாலும், கொலை மிரட்டல்களாலும், மற்றும் மார்க்கப் பிளவுகளாலும் காத்தான்குடியில், கடைகளும், வீடுகளும், தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களும், தனி நபர்கள் தாக்கப்பட்டதும், வாகனங்கள், வீடுகளுக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதும், பெட்ரோல் குண்டுகளும், அநாமோதய துண்டுப் பிரசுரங்களும் வெளியிடுவதும் காத்தான்குடியின் அரசியலின் தனிச் சிறப்புக்கள்.
கருத்துக்களை கருத்தால் வெல்ல முடியாதவர்களின் அரசியல், மார்க்க முரண்பாடுகளால் இனிமேலும் காத்தான்குடி அதள பாதாளத்துக்கள் செல்லக் கூடாது.
பிழைகள் இருப்பின் அவற்றை கண்ணியமான முறையில் திருத்திக்கொள்ள, அல்லது தான் தவறற்றவன் என்பதை நிரூபிக்க முன்வரவேண்டுமே தவிர, இவ்வாறான மோசடிகளை கையாண்டு, தனது அரசியல் மற்றும் பொது எதிரிகளை கைது செய்வதும், சிறைகளில் அடைப்பதும் இஸ்லாத்துக்கு முரணாண விடயம் என்பதுடன், அல்லாஹ் அநியாயம் செய்வோரை இவ்வுலகில் தண்டித்து மரணிக்கச் செய்ததையும் வரலாறாக எடுத்துப் பார்க்க வேண்டும்.
சத்தியத்தை முன்வைப்பதற்கு குடும்பமோ, கோத்திரமோ தடைக்கற்கலாக இருக்க முடியாது. இது மக்களால் வழங்கப்பட்ட அரசியல் அந்தஸ்துகளும், பதவிகளுமே தவிர, சொந்த முதலில் தொடங்கிய வியாபாரமல்ல என்பதை அரசியல் வாதிகளும், ஊர்ப்பிரமுகர்களும், உலமாக்களும் சிந்திக்க வேண்டும்.

Leave a reply to முஹம்மது Cancel reply