யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்திற்கு இன்று புதனன்று விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருக்கின்றார்.
வடபகுதி மக்களின் வாழ்வாதாரம், கல்வி, கல்வி பயிற்சி மற்றும் அங்குள்ள நிலைமைகளில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் எதிர்நோக்கப்படுகிற சவால்கள் குறித்து இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் செய்தியாளரிகளிடம் கூறினார்.
பெண்களைத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படவுள்ள இந்த உதவியின் மூலம் இரண்டு வருடங்களில் அந்தக் குடும்பங்கள் நிரந்தர வருமானத்தைப் பெறக் கூடியதாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.
ஆங்கில மொழிப்பயிற்சி மற்றும் யாழ். பல்கலைக்கழகக் கல்வியிலும் உதவிகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளரிகளிடம் கருத்து வெளியிட்ட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் என்ன பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைப் பற்றி அமெரிக்க தூதுவரும் அமெரிக்க மக்களும் அறிந்துள்ளதாகவும், அதனடிப்படையில் என்னென்ன உதவிகள் வழங்கப்படும் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஐயாயிரம் குடும்பங்களுக்கு இரண்டு வருடகால உதவி என்ற வகையில் வாழ்வாதார உதவிகள் வழங்குவது பற்றியும் தாங்கள் பேசியதாக அவர் கூறினார்.
BBC Tamil

Leave a comment