மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட கலை இலக்கியவிழாவை முன்னிட்டு கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளுர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், உள்ளுர் அறிவுத்திறனை வளர்த்தெடுக்கும் செயற்திட்டத்திலும் மாவட்ட செயலகம் கைவினை உள்ளுர் உற்பத்திறனாக என்ற தொனிப்பொருளில் இந்த கண்காட்சி விற்பனையை நடத்துவதாக மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.
வெள்ளி முதல் 27ஆம்திகதி வரை கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் தினமும் பிற்பகல் 2.30 முதல் இரவு 8.30 மணிவரை நடைபெறும்.
மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் சி.மௌனகுரு,உதவி அரசாங்க அதிபர் ரங்கநாதன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இக் கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளையும் சேர்ந்த கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள், அமைப்புக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பங்குபற்றியுள்ளனர்.
மாவட்டத்தின் பனை, பன், தென்னை, மரம் உள்ளிட்டவற்றினால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருள்கள், மற்றும் அலங்காரப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment