மட்டக்களப்பு: கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 310 மில்லியன் ரூபா நிதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பாலங்களும், வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கான கட்டடத் தொகுதியும் எதிர்வரும் 28ம் திகதி திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
மட்டக்களப்பு வலையிறவு, ஆயித்திய மலை பிரதேசங்களின் பிரதான வீதியில் அமைக்கபட்ட இரு பாலங்களும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் புதிய கட்டடத் தொகுதியும், மட்டு. மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் காரியாலயம் என்பன இதன் பொது வைபரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளன.
யுத்தம் முடிவுற்றதன் பின்னர் ஜனாபதியின் வழிகாட்டளின் கீழ் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் துரித அபிவிருத்திப்பணிகளில் இதுவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
இந்த நிகழ்வுகளில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் அழைப்பின் பேரில் பிரதம அதிதிகளாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட்,கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாபதி ஆலோசகருமான எஸ்.சந்திரக்காந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் உயரதிகாரிகள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை மட்டு வலையிறவு, ஆயித்திமலை பிரதேசங்களில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் சுமார் 404 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வரும் கொங்ரீட், காபட் வீதிகளும் விரைவில் மக்கள் பாவனைக்காக கையளித்து வைக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment