காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய தஃவா நிலையத்தின் (மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயல்) ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை 19.10.2013 மாபெரும் மனித நேயம் பேணும் இரத்ததான முகாமொன்று காத்தான்குடி 05 மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலில் காத்தான்குடி இஸ்லாமிய தஃவா நிலையத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் அஸ்பர் ஹஸன் (பலாஹி) தலைமையில் நடைபெற்றது.
‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் காலை 08.00மணி முதல் மதியம் 01.00மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.முபீன்,காத்தான்குடி ஜம்மியதுல் உலமா செயலாளர் அஷ்ஷெய்க் ஜிப்ரி (மதனி),காத்தான்குடி இஸ்லாமிய தஃவா நிலையத்தின் தலைவர் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள்,உலமாக்கள்,ஊர்ப்பிரமுகர்கள்,ஊடகவியலாளர்கள்,முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்களான் டாக்டர் நிசாந்தினி மற்றும் டாக்டர் கே.விவேகானந்தநாதன் ஆகியோர் கலந்து கொண்ட இவ் இரத்ததான நிகழ்வில் 90க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர். இங்கு ஆண் பெண் கலப்பில்லாதவாறு பெண்களுக்கும் இரத்ததானம் வழங்குவதற்கான பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
குறித்த காத்தான்குடி இஸ்லாமிய தஃவா நிலையம் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு தஃவா மற்றும் சமூகப் பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment