மண்முனை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கில் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் மண்முனைப் பாலத்தின் நிர்மாண வேலைகளை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் அழைப்பின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த மக்கள் தொடர்பாடல் மற்றும் மக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா நேரில் சென்று பார்வையிட்டார்.
இவ் விஜயத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பல்லாண்டு காலமாக விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கில் படுவான்கரையயும் -எழுவான்கரையையும் இணைக்கும் மண்முனை பால வேலைத்திட்டம் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.
ஜப்பான் அரசாங்கத்தின் 1473 மில்லியன் ரூபா நன்கொடை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 397 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் குறித்த பால நிர்மாண வேலைகள் பூர்த்தியடைந்து 2014 மே மாதமளவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
குறித்த பாலம் அமைக்கப்பட்ட பின்னர் படுவான்கரை மக்கள் மட்டக்களப்பிற்கு மேற்கொள்ளும் போக்கவரத்து மிக இலேசாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment