உன்னாவ்: உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே 1000 டொன் தங்கப் புதையலைத் தேடுவதற்காக அகழாய்வுப் பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே மன்னர் ராம்பக்சிங்கின் கோட்டை சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது.
இந்த மன்னர் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்டார்.அண்மையில் மன்னரின் கோட்டை இருக்கும் கெடா கிராமத்து சாது ஒருவரின் கனவில் மன்னர் ராம்பக்சிங் தோன்றி, கோட்டையில் 1000 டொன் தங்கப் புதையல் இருப்பதாக கூறியுள்ளார்.
இதை சாது சோபன் சர்கார் பலரிடம் சொல்லியும் எவரும் நம்பவில்லை. இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் சரண்தாஸ் மகந்திடம் நேரில் எடுத்துச் சொல்லி நம்ப வைத்துள்ளார் சாது சோபன் சர்கார். பின்னர் தங்கப் புதையலை தோண்ட தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் இன்று காலை 7.30 மணிக்கு சாது சோபன் சர்கார் சிறப்பு பூஜைகளை நடத்தினார். பின்னர் 8 மணியளவில் புதையலைத் தோண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. மாலை வரை தொடர்ந்து தோண்டப்படும். அப்பகுதியில் உள்ளூர்வாசிகள் அனுமதிக்கப்படவில்லை.
இதனிடையே புதையல் தங்களுக்கே சொந்தமானது என்று மன்னரின் வாரிசுகள் உரிமை கோரினர். ஆனால் உத்தரப்பிரதேச மாநில அரசோ அது அரசாங்கத்துக்குத்தான் சொந்தம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


Leave a comment