மட்டக்களப்பு: பாடசாலை மாணவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் செலான் வங்கியினால் இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் நடாளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் மாணவர் சேமிப்புப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் செலான் வங்கியின் மட்டக்களப்பு கிளையினால் ஆண்கள் பாடசாலைகளில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி ஆரம்பப் பிரிவு பாடசாலையிலும் பெண்கள் பாடசாலைகளில் மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் உயர்தர பாடசாலையிலும் பாடசாலை மாணவர் சேமிப்புப் பிரிவு இன்று வியாழக்கிழமை செலான் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் கலாநிதி நிரஞ்சன் பத்மநாதனினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
செலான் வங்கியின் மட்டக்களப்பு கிளையின் முகாமையாளர் திருமதி பத்மசிறி இளங்கோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செலான் வங்கி பிரதிப் பொது முகாமையாளர் கலாநிதி நிரஞ்சன் பத்மநாதன், கிழக்குப் பிராந்திய முகாமையாளர் சிவஞானி உபதிஸ்ஸ ,மட்டு மாவட்ட கிளையின் உதவி முகாமையாளர் பிரேம்னி மோகன்ராஜ், மட்டு -புனித மிக்கேல் கல்லூரி அதிபர் திருமதி.மாசிலாமனி,மட்டு -புனித மிக்கேல் கல்லூரி ஆரம்பப் பிரிவு பாடசாலை அதிபர் திரு. கணகசிங்கம், மட்டு-வின்சன்ட் பெண்கள் உயர்தர பாடசாலை அதிபர் திருமதி.ஆர். கணகசிங்கம் உட்பட ஆசிரிய ஆசிரியைகள் ,மாணவ மாணவிகள்,செலான் வங்கி ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
புதிதாக வங்கியில் சிறுவர் கணக்கை ஆரம்பிப்பதாயின் ரூபா 500 செலுத்த வேண்டும் என்பதுடன் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுவர் சேமிப்புப் பிரிவுகளில் சிறுவர் கணக்கை ஆரம்பிப்பதாயின் ரூபா 100 மாத்திரம் செலுத்தி திறக்க முடியும் என செலான் வங்கியின் மட்டக்களப்பு கிளையின் முகாமையாளர் திருமதி பத்மசிறி இளங்கோ தெரிவித்தார்.
இதன் போது செலான் வங்கியின் டிக்கிரி சிறுவர் சேமிப்புக் கணக்கில் அதிக சேமிப்புக்களை செய்துள்ள சிறுவர்களுக்கு துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment