செங்கலடி: மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலில் தப்பி தன்னை பாதுகாப்பதற்காக ஆற்றில் குதித்த விவசாயியொருவர் முதலையிடம் சிக்கி படுகாயமடைந்துள்ளார். போருக்கு பின்னர் மீள்குடியேற்ற கிராமமான உறுகாமம் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதே கிராமத்தில் நேற்று 12 வயது சிறுவனொருவன் யானையின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளான். தமது கிராமத்தில் மழை வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்த சிறுவன் சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்று 24 மணி நேரத்திற்குள் யானையிடமிருந்து தப்பி ஓடி முதலையின் பிடியில் சிக்கி காயமடைந்த விவசாயி அரசாங்க வைத்தியசாலையொன்றின் அவசர சிகிச்சை பிரில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
27 வயதான இந்நபர் தனது கால்நடை பண்ணையில் பால் கறப்பதற்காக சென்றவேளை எதிர்கொண்ட யானையால் துரத்தப்படடு ஆற்றில் பாய்ந்ததாக கூறப்படுகின்றது.
காட்டு யானைகளின் தொல்லை தற்போது இரவில் மட்டுமல்ல பகலிலும் அதிகரித்து வருவதாவே உறுகாமம் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த சம்பவங்களையடுத்து சில குடும்பங்கள் தற்போது வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
வனஜீவராசிகள் தினைக்களத்திற்கு அறிவிக்கும்போது அவர்கள் வந்து யானைகளை காடுகளுக்குள் விரட்டினாலும் பழக்கப்பட்ட யானைகள் போன்று அவை மீண்டும் அதே இடங்களுக்கு வருவதாகவும் உள்ளுர் மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதேவேளை செங்கலடி- பதுளை நெடுஞ்சாலையை அண்மித்த காடுகளில் இன்று பகல் முழுவதும் காணப்பட்ட யானைக் கூட்டமொன்று வனஜீவராசிகள் தினைக்கள அதிகாரிகளினாலும் காவல் துறையினராலும் பகல் முழுவதும் கண்காணிக்கப்பட்டு மாலையில் சத்த வெடிகள் மூலம் காடுகளுக்குள் விரட்டப்பட்டன.
BBC Tamil
Leave a comment