– பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச இளைஞர் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2013 கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எம். சுஜாத் அஹ்மத் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் இவ்வாண்டுக்கான சகலதுறை சம்பியனாக குபா இளைஞர் விளையாட்டுக் கழகம் தெரிவானது.
மெய்வல்லுனர் ஓட்டப்போட்டி, கபடி, கிரிக்கட், காற்பந்து, கரப்பந்தாட்டம், அத்லடிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெற்ற இவ்விளையாட்டு விழாவில் 2013 ஓவறூல் சம்பியன் கிண்ணத்தை காத்தான்குடி குபா விழையாட்டுக்கழகம் சுவீகரித்துக் கொண்டது.
ஓவறூல் சம்பியனான காத்தான்குடி குபா விளையாட்டுக் கழகத்திற்கான சம்பியன் கிண்ணத்தை காத்தான்குடி சியாட் பௌண்டேஷன் தலைவரும் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஷியாட் வழங்கி வைத்தார்.
இதன் இறுதி நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான சல்மா அமீர் ஹம்சா, எம்.எஸ்.எம்.ஷியாட், காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், காத்தான்குடி பிரதேச செயலக இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹி, ஏறாவூர் பிரதேச செயலக இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.றம்ஸி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
இந்தப் போட்டியில் காத்தான்குடி ரியல் ஏசியன்,குபா, சோசியல் வேல்பெயார்,அக்றம்ஸ், ரெஸ்டோ லங்கா உள்ளிட்ட பல விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றினர்.
இதன்போது காத்தான்குடியில் மிக நீண்ட காலமாக விளையாட்டுத் துறைக்கு சேவையாற்றியவர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment